நகைபட்டறை கொள்ளை நான்கு மணி நேரத்தில் கைது - நகைகள் மீட்பு

நகைபட்டறை கொள்ளை நான்கு மணி நேரத்தில் கைது - நகைகள் மீட்பு

திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், வீடுகள், கடைகள் ஆகியவற்றில் பூட்டை உடைத்து திருட்டு குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து, சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திருச்சி மாநகர வடக்கு மற்றும் தெற்கு காவல் துணை ஆணையர்கள், சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்யாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.

திருச்சி சந்துக்கடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவைச் சேர்ந்த ஜோசப் (43), என்பவர் கடந்த 15 வருடங்களாக தனது வீட்டிலேயே நகை பட்டறை வைத்து, ஆர்டரின் பேரில் மூக்குத்தி செய்து கொடுக்கும் தொழில் செய்து வருவதாகவும், கடந்த ஒரு மாதமாக சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் நகை வேலை முடித்துவிட்டு, வேதாத்திரி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று விடுவதாகவும், வழக்கம் போல நேற்று 25.04.2023-ஆம் தேதி, அவரும் அவரது மனைவி ஏஞ்சல் மேரியும் நகை வேலை முடித்து விட்டு இரவு சுமார் 10 மணியளவில் வேதாத்திரி நகரில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டதாகவும், 

இன்று (25.04.2023)-ஆம் தேதி காலை சுமார் 6 மணியளவில், ஜீவா என்பவர் தமக்கு போன் செய்து வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்ததின் பேரில், மேற்படி ஜோசப் தனது மனைவியுடன் சௌந்தர பாண்டியன் தெருவில் உள்ள வீட்டிற்கு வந்த பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாகவும், வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் ஆர்டரின் பேரில் மூக்கத்தி செய்வதற்காக தங்கத்தை கம்பியாக உருக்கி வைத்திருந்த தங்கம், கல் வைத்த மூக்குத்திகள், பூ மூக்குத்திகள்,

கல் வைக்காத மூக்குத்திகள், மூக்குத்திகளின் திருகாணிகள், நகை செய்யும் போது சேதாரமாகும் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த தோடு ஆகிய நகைகள் திருடப்பட்டு இருப்பதாகவும், அவற்றின் மொத்த எடை சுமார் 1 கிலோ கிராம் இருக்கும் என்றும், மொத்த மதிப்பு சுமார் ரூ. 50,00,000/- இருக்கும் என்றும், மேற்படி திருடு போன நகைகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டு கொடுக்கப்பட்ட புகார் அளித்தார். 

அதன் பேரில் (26.04.2023)-ஆம் தேதி காலை 09:30 மணிக்கு கோட்டை (குற்றபிரிவு) காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்தும், திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரனை செய்யப்பட்டு வந்தது.

தனிப்படையினரின் புலன்விசாரணையில் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கான பார்வையிட்டு விசாரணை செய்ததில், திருச்சி மாநகரம், கோட்டை காவல் நிலைய சந்தேக நகர் சரித்திர பதிவேடு (Suspect History Sheet) உள்ள ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலையத்தில் 8 வழக்குகளும், காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், அரியமங்கலம் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கிலும் சம்பந்தப்பட்ட திருச்சி இ.பி ரோடு, கருவாட்டுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரணி குமார் (22) மற்றும்

திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலையத்தில், ஒரு வழக்கும், காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், பாலக்கரை காவல் நிலையத்தில் ஒரு வழக்கிலும் சம்மந்தப்பட்ட திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ், செங்குளம் காலனி, முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன், (22) என்பவர் என்று தெரியவந்ததன் பேரில் மேற்படி எதிரிகளை தனிப்படையினர் பல இடங்களில் தேடியும் ரகசிய விசாரணை மேற்கொண்டதில் மேற்படி எதிரிகள் கோட்டை காவல் நிலைய எல்லைக்குள் இருப்பதாக தெரிந்து, அவர்களை (26.04.2023)-ஆம் தேதி சுமார் 12:30 மணிக்கு கைது செய்தும், கருவாட்டுப்பேட்டையில் உள்ள மேற்படி எதிரி பரணிகுமார் என்பவரின் வீட்டில் இருந்த நகைகளை எதிரி பரணிகுமார் எடுத்து ஆஜர் செய்த நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரியை கைது செய்த ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆனையர் நிவேதாலெட்சுமி மற்றும் கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுலோச்சனா மற்றும் தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, வெகுவாக பாராட்டி, வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வழக்கில் புகார்தாரர், அவரது நகைப்பட்டறையில் நடந்த களவை மிகதுரிதமாக விசாரணை செய்து 4 மணி நேரத்திற்குள் எதிரிகளை கைது செய்த திருச்சி மாநகர காவல் துறையினருக்கு மனதார தனது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn