அனுமதியின்றி இயங்கிய விளையாட்டு பயிற்சி கூடம் பூட்டி சீல் வைப்பு

அனுமதியின்றி இயங்கிய விளையாட்டு பயிற்சி கூடம் பூட்டி சீல் வைப்பு

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வீடு, கடைகள், வணிகவளாகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டுவதற்கு மாநகராட்சி அனுமதி பெற்ற பின்னரே கட்டுமான பணிகளை துவங்க வேண்டும். மேலும், கட்டடங்கள் கட்டி முடித்த பின்னர், நில அளவையர் பார்வை யிட்டு அளவிட்டுவரியினம் குறித்து ஆணை வழங்கிய பின்னர் வரி போடப்படும். இதனை மீறும்பட்சத்தில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டங்களை பூட்டி சீல் வைத்து வருகின்றனர்.

இதில், கோ அபிஷேகபுரம் மண்டலத்திற்குட்பட்ட அண்ணாமலைநகர் மெயின்ரோட்டில் ரவிச் சந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சுமார் 4 ஆயிரம் சதுர அடி யில் இரும்பு கூரையுடன் கூடியவிளையாட்டு பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு மாதமாக பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது. மாநகராட்சி அனுமதியின்றி விளையாட்டு பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு செயல்படுவதாக மாநகராட்சி கமிஷனருக்கு புகார் வந்தது.

புகாரை அடுத்து மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் உத்தரவின் பேரில் கோஅபிஷேகபுரம் மண்டல உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் கடந்த 3 மாதத்திற்கு முன் விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்அனுமதி இன்றி விளையாட்டு பயிற்சிகூடம் அமைக்கப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து முன் அனுமதி பெறாமல் எப்படி வினையாட்டு பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. என கேட்டு மாநகராட்சி சார்பில் விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு எவ்வித பதிலும் வராததால் தொடர்ந்து தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 56 மற்றும் 57 சட்டப்பிரிவின்கீழ் மீண்டும் கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீக்கும் எவ்விதபதிலும் இல்லாததை அடுத்து கோ.அபிஷேகபுரம் மண்டல உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் உதவி செயற்பொறியாளர் ரமேஷ்கண்ணா, இளநிலை பொறியாளர் ரவி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தி, விளையாட்டு பயிற்சி கூடத்தினை பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.