காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்கள்-பரபரப்பு

காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்கள்-பரபரப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நீதிமோகன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலம் சம்பந்தமாக இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதுகுறித்து இரு தரப்பினரும் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் நீதிமோகன் அவரது மனைவி அலமேலுமங்கை மற்றும் உறவினர் மீரா 3 பேரின் மீதும், நீதிமோகன் மனைவி அலமேலுமங்கை கொடுத்த புகாரின்பேரில் செல்வராஜ் அவரது மகன்கள் அஜித்ராஜ், யோகராஜ் 3 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் செல்வராஜ் தரப்பினர் நில பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த புகாரின் பேரில் 2 வழக்குகள் நீதிமோகன் மீது பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது கொடுத்த வழக்கோடு 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக கூறி செல்வராஜ் அவரது மகன்கள் அஜித்ராஜ், யோகராஜ் ஆகிய 3 பேரும் மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனைக் கண்ட போலீசார் 3 பேரையும் தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும் 3 பேரும் அங்கும் இங்கும் ஓடி உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டனர். தொடர்ந்து தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் போராடி தடுத்து நிறுத்தினர். மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே நீதிமோகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் மீட்டு அழைத்து சென்றனர். காவல் நிலையம் முன்பு தந்தை மகன்கள் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision