சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள்

சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள்

தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் சீரிய நோக்கங்களில் ஒன்றான மாணவர் இயக்கங்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் அண்ணா பல்கலைக் கழகமானது (2021 2022)-ம் ஆண்டிற்கான பல்கலைக் கழக அளவிலான நாட்டு - நலப்பணித்திட்ட விருதுகளை வழங்கி சிறப்பு செய்துள்ளது.

விருது வழங்கும் நிகழ்வானது சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் முதன்மைச் செயலர் அதுல்யா மிஸ்ரா, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ், நாட்டு நலப்பணித்திட்ட மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா,

மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செந்தில் குமார், அண்ணா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இவ்விருதிற்காக தமிழ்நாட்டிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வல்லுநர் குழுவின் பரிசில்னை மற்றும் பரிந்துரையின்படி திருச்சி மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர், பஞ்சப்பூரில் அமைந்துள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பிற்கு அவர்களின் சீர்மிகு சேவையை பாராட்டும் பொருட்டு 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பினை திறம்பட வழி நடத்தியதற்காக 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான "பல்கலைக் கழக அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருது மற்றும்

இறுதியாண்டு கட்டிடவியல் துறையில் பயிலும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் N.R.நாகர்ஜீனா-க்கு சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்" விருதுகளை பெற்றுள்ளனர். இவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

சாரநாதன் பொறியியல் கல்லூரியை பெருமைப்படுத்திய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் N.R.நாகர்ஜீனா ஆகியோருக்கு கல்லூரியின் முதல்வர் வளவன், செயலர் ரவீந்திரன், பேராசிரியர்கள், மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.