100 அடி உயர திமுக கொடி கம்பத்தை அகற்ற திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

100 அடி உயர திமுக கொடி கம்பத்தை அகற்ற திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் குருராஜ் , உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,.... நான் திருச்சியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவராக உள்ளேன். கடந்த 1990ம் ஆண்டு முதல் திமுக கட்சியின் உறுப்பினராகவும் உள்ளேன். 

திருச்சி திருவெறும்பூர் குண்டூர் கிராமம் அருகே புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை வளைவு அருகில் 100 அடி உயர ராட்சத திமுக கொடி கம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தின் அருகில் பொதுமக்கள் மற்றும் வாகனப்போக்குவரத்து அதிகம் இருக்கக்கூடிய இடமாகும் . 

மேலும் இங்கு பேருந்து நிறுத்தம் இருப்பதால் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்த இடத்தில் ராட்சத கொடி கம்பம் அமைத்து இருப்பதால் பின்னாளில் மழை மற்றும் புயல் காலங்களில் மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் வாய்புள்ளது. 

மேலும் கொடி கம்பம் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்து உள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் ஒரு கட்சி கொடி அமைப்பது என்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். நானும் இதே கட்சியை சேர்ந்தவனாக இருந்தாலும், அபாயகரமான கொடி கம்பம் அமைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. கடந்த மாதம் 26ம் தேதியன்று சம்மந்தப்பட்ட இடத்தில் திமுக கொடிக்கம்பத்தை நிறுவி விட்டனர் . 

எனவே திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை, OFT ஆர்ச் அருகில் அரசு புறம் போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர ராட்சத திமுக கொடி கம்பத்தை அகற்றி பொதுமக்கள் பயமின்றி நடமாட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ண குமார், விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள 100 அடி உயர கொடி கம்பத்தை 15 நாட்களில் அகற்ற திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இது குறித்த அறிக்கையை ஜூன் 1ம் தேதி தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.