முன்னாள் திமுகவினர் 5 பேர் ஜாமின்? - நீதிபதி சரமாரியாக கேள்வி

முன்னாள் திமுகவினர் 5 பேர் ஜாமின்? - நீதிபதி சரமாரியாக கேள்வி

திருச்சி கண்டோன்மென்ட் எஸ்பிஐ காலனி பகுதியில் கடந்த 15ஆம் தேதி நவீன இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் அருகே சிவா எம்.பி வீடு உள்ளது. அங்கு திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர் நேருவிற்கு எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் எம்.பி யின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியும், எம்பி வீட்டில் உள்ள நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகன மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர்.

இதனை தொடர்ந்து கருப்புக்கொடி காட்டிய பத்துக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் பிடித்து திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பொழுது காவல் நிலையத்திற்குள் புகுந்து எம்.பி ஆதரவாளர்களை அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவம் காட்சி சமூக வலைதளங்கள் வைரலாக பரவியது. இதனையடுத்து தாக்குதலில் நடத்திய அமைச்சரின் ஆதரவாளர்கள் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், முன்னாள் மாவட்ட பொருளாளர் துரைராஜ், 55 ஆவது முன்னாள்  வட்ட செயலாளர் ராமதாஸ் மற்றும் முன்னாள் பகுதி துணை செயலாளர் திருப்பதி ஆகிய ஐந்து பேருக்கு ஜாமின் மனு கடந்த (20.03.2023) திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2ல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி பாலாஜி தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் நேற்று (23.03.2023) மீண்டும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2ல் இரண்டாவது முறையாக 5 பேருக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதை தொடர்ந்து ஐந்து பேருக்கு ஜாமீன் பெற அவர்களது வழக்கறிஞர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

மாவட்ட நீதிபதி ஆய்வு பணிக்காக வெளியே சென்றிருந்ததால் கூடுதல் இரண்டாவது மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் இந்த ஜாமீன் மனுவை விசாரித்தார். முதலில் ஐந்து பேருக்கும் நீதிபதி ஜாமின் மறுத்தார். மேலும் காவல் ஆய்வாளரை அழைத்து கடுமையாக பேசினார். ஏன் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது மற்றும் (பெண் காவலர்) என்ற முறையில் பெண்ணை தாக்கியதற்கான வன்முறை சட்டங்கள் பதிவு செய்யப்படவில்லை என்று கேட்டார். சட்டபிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தினார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வருகிற திங்கள்கிழமை (27.03.2023) ஜாமீன் மீதான விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn