பூச்சொரிதல் விழா - போக்குவரத்து சீர் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்.

பூச்சொரிதல் விழா - போக்குவரத்து சீர் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் வருகின்ற (10.03.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள பூச்சொரிதல் திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது- தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் சமயபுரம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா முக்கிய திருவிழாவாகும். அந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

காவல்துறையினர் பூச்சொரிதல் திருவிழா நடைபெறும் (10.03.2024) அன்று பக்தர்கள் திருக்கோவிலுக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். மேலும் திருக்கோயிலின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து துறையினர் சமயபுரத்திற்கு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்லும் வகையில் கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் புறவழிச்சாலை, மருதூர் பிரிவுரோடு, வி.துறையூர் பிரிவு ரோடு, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆட்டுச்சந்தை பிரிவு ரோடு. சமயபுரம் நால்ரோடு, சமயபுரம், மண்ணச்சநல்லூர் பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பணிகளை முறையாக கண்காணித்து சீர் செய்ய வேண்டும்.

மின்சார வாரிய அலுவலர்கள் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கும், பழுது ஏற்பட்டால் உடனே நிவர்த்தி செய்ய தேவையான அளவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். மருத்துவத்துறையினர் பொதுமக்கள் அவசர தேவைக்காக திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலை, சமயபுரம் நுழைவு வாயில், சமயபுரம் திருக்கோவில் செல்லும் கடைவீதி, காவல் நிலையம் அருகில் உள்ள பகுதியில், திருக்கோவில் திருமணமண்டபம் முன்பகுதி மற்றும் தேவையான இடங்களில் 24 மணி நேரம் செயல்படும் மருத்துவ முகாம் செயல்படுத்த வேண்டும்.

இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் அமைத்தல், தேவையான இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வசதி, கூடுதல் முதலுதவி முகாம் மற்றும் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் இருமருங்கிலும் குண்டு குழிகள் இல்லாமல் ஒரே சீராக மண் அமைப்பு ஏற்படுத்தி, எளிதாக பக்தர்கள் நடந்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தீயணைப்புத்துறை மூலம் தேவையான அளவு தண்ணீர், தீயணைக்கும் உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். எஸ்.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே சின்டெக்ஸ் டேங்க் குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்து தரவேண்டும். ஆண்கள், பெண்கள் என தனித்தனியே தற்காலிக கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் அமைத்து தர வேண்டும். காவல்துறையுடன் இணைந்து சுகாதாரமற்ற உணவு பொருள்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட சுகாதாரப் பணியாளர்களை கூடுதல் அளவில் நியமனம் செய்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் அதற்கான அனுமதி பெற்ற இடத்தில் மட்டும்தான் முறையாக உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து தரமான உணவு வகைகள் வழங்குவதை உணவு பாதுகாப்புத்துறையினர் உறுதி செய்திட வேண்டும். அனுமதி பெறாத இடங்களில் அன்னதானம் கண்டிப்பாக வழங்க கூடாது.

திருக்கோயில் சிறப்பு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் வேண்டும். திருக்கோயில் பெருந்திட்ட வளாகப் பகுதியில் கட்டணமில்லா கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்வசதி, முடிகாணிக்கை செலுத்திய பக்தர்கள் குளிப்பதற்கு ஆண்கள், பெண்கள், தனியே குளியல் தொட்டி, உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட வசதி செய்து கொடுத்தல் வேண்டும். பூச்சொரிதல் விழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும், கோயில் நிர்வாகமும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அதியமான், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) காளியப்பன், காவல் துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்துசமய அறநிலையத்துறை மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision