திருச்சியில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் வினோத திருவிழா

திருச்சியில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் வினோத திருவிழா

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள அச்சப்பன் கோயிலில் ஆயுத பூஜைக்கு அடுத்த நாளான விஜயதசமி அன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு அச்சப்பன் சுவாரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடும் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அச்சப்பன் சுவாமி பரிவார தெய்வங்களுடன் காட்டு கோயிலில் எழுந்தருளினார். அங்கு கோயில் பூசாரிகள் சேர்வை அடித்து நடனம் ஆடினார்கள். பின்னர் கோவில் முறை உள்ள பக்தர்களுக்கு தலை தேங்காய் உடைக்கப்பட்டது. மேலும் அங்குள்ள மைதானத்தில் நீண்ட வரிசையில் தலைவிரி கோலமாக மண்டியிட்டு கைகளை உயர்த்தியவாறு அமர்ந்திருந்த பெண்களின் கைகளில் கோயில் பூசாரி சாட்டையால் அடித்தார்.

இவ்வாறு கோயில் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்குவதால் பேய் பிடித்திருந்தால் விலகிவிடும் என்ற நம்பிக்கையும், குழந்தை வரம், திருமண தடை, தொழில் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வரங்கள் கிடைத்திடும் என இப்பகுதி பத்தர்கள் நம்புகின்றனர். அச்சப்பன் சுவாமிகளிடம் வேண்டிக் கொண்டு நேர்த்திக்கடனாக சாட்டையால் அடி வாங்குவது இப்பகுதி நீண்ட கால வழக்கமாக உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO