கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே பேச்சுப் போட்டிகள் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே பேச்சுப் போட்டிகள் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி (27.09.2023)ஆம் நாளன்று (புதன்கிழமை) முற்பகல் 10:00 மணிக்கும், தந்தை!பெரியார் பிறந்தநாளையொட்டி அதே நாளன்று பிற்பகல் 2:00 மணிக்கும் வாலாயமான விதிமுறைகளைப் பின்பற்றி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையேயான பேச்சுப் போட்டிகள் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நிகழாண்டில் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொள்ளலாம். 

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி (27.09.2023) அன்று காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ள கல்லூரி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டிக்கு 1) அண்ணாவும், மேடைப் பேச்சும், 2) கடமை, கண்ணியம், கட்டுபாடு, 3) மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, 4) வாய்மையே வெல்லும், 5) ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டி நடத்தப்படும்.

தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி (27.09.2023) அன்று பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறவுள்ள கல்லூரி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டிக்கு 1) பெரியாரும் பெண் விடுதலையும், 2) சுயமரியாதை இயக்கம், 3) தெற்காசியாவின் சாக்ரடீஸ் 4) தன்மானப் பேரொளி, 5) தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டி நடத்தப்படும். மேலும், பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை, ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தெரிவு செய்து போட்டிக்குரிய பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும்.

மேற்காண் கல்லூரி மாணவர்களிடையேயான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision