கேரளாவைச் சேர்ந்த கஞ்சா கடத்தல் மன்னன் கடத்தி அடித்து துன்புறுத்தல் - 3 பேர் தப்பி ஓட்டம் - 2 நபர் கைது

கேரளாவைச் சேர்ந்த கஞ்சா கடத்தல் மன்னன் கடத்தி அடித்து துன்புறுத்தல் - 3 பேர் தப்பி ஓட்டம்  - 2 நபர் கைது

திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டறைக்கு ஒரு தகவல் வந்தது. அதில் திருச்சி திருவானைக்காவல் ட்ரங் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஐந்து பேர் தங்கி இருப்பதாகவும், ஒருவரை ஐந்து பேர் சேர்ந்து அடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல்துறையினர் அந்த ஓட்டலுக்கு சென்று அங்கு பார்த்தபொழுது மூன்று பேர் தப்பி ஓடி விட்டனர்.

மீதமிருந்த இரண்டு பேரை ஸ்ரீரங்கம் காவல்துறையினர் பிடித்தனர். மேலும் ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டு அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு பிடிபட்ட இருவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற சொன்னவரை காணவில்லை என்று போலீசார் தேடியுள்ளனர். இதனை தொடர்ந்து பிடிபட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில்...காயங்களுடன் தப்பி ஓடிய நபர் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷாஜி மோன் (58) என்றும், கேரளா மாநில போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளியான என்பதும் தெரியவந்தது. 

மேலும் விசாரணையில் கொடைக்கானல் பகுதியில் குத்தகைக்கு நிலங்களை வைத்திருப்பதாகவும் பிடிபட்ட தென்காசி கவிராஜா, கேரளா சேர்ந்த அன்ஷால் இருவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இருவரையும் காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்தக் கடத்தலை திட்டமிட்ட திருச்சி துறையூரை சேர்ந்த சாம் சுந்தர் தலைமறைவாகியுள்ளான். போலீசார் வந்த பொழுது கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீவத், சரத் ஆகிய இருவரும் ஓட்டலில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். 

இந்த 5 பேரும் சேர்ந்து தான் ஷாஜி மோனை கடத்தி வந்து பத்து கோடி ரூபாய் பணம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உன்னை பற்றி காவல்துறையிடம் தகவல் தெரிவித்து விடுவோம் என மிரட்டி அடித்துள்ளனர். தற்பொழுது கஞ்சா கடத்தல் மன்னன் ஷாஜி மோனை திருச்சி மாநகர தனிப்படை போலீசாரும், கேரள மாநில போலீசாரும் தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision