எவராக இருந்தாலும் சட்டப்பூர்வ நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

எவராக இருந்தாலும் சட்டப்பூர்வ நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நேற்று (27.05.2023) இரவு திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், நரசிங்கபுரம் மலையடிவாரத்தில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் துறையூர்வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மணல் கடத்தலை தடுக்க

அப்பகுதிக்குச் சென்று பணியில் ஈடுபட்டபோது நரசிங்கபுர ஊராட்சி மன்றத் தலைவரான மகேஸ், தனபால், மணி மற்றும் கந்தசாமி ஆகியோர் கொடூர தாக்குதலை மேற்கொண்டு அவ்விடத்தை விட்டு தலைமறைவாகினர். 

உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன் தகவலை பெற்று தாக்குதலுக்குள்ளான வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை பெருமாள் பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம் அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை கிடைக்கச் செய்தார். 

அதன் பின்னர் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை இன்று நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறினார்.

மேலும், அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் செயலை செய்பவர் எவராக இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் அதனை அனுமதிக்காது. இக்குற்றச் செயலில் ஈடுபட்டோர் மீது உடனடியாக காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 294(b),341,323,353,332,307,506(1),379 மற்றும் 21(4)ன் கீழ் வழக்கு பதியப்பட்டு

மகேஸ், தனபால், மணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கந்தசாமி என்பவர் விரைவில் கைது செய்யப்படுவார். இவர்கள் மீது தொடர்ச்சியான சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn