திருச்சி மாநகராட்சியில் ரூ.73லட்சம் உபரி பட்ஜெட் தாக்கல்

திருச்சி மாநகராட்சியில் ரூ.73லட்சம் உபரி பட்ஜெட் தாக்கல்

திருச்சி மாநகராட்சியின் (2024-2025)-ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையினை நிதிக்குழு தலைவரும் மாமன்ற உறுப்பினருமான தி.முத்துசெல்வம், மேயர் மு.அன்பழகனிடம் இன்று தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் துணை மேயர் திவ்யா தனக்கோடி, மாநகராட்சி ஆணையர் சரவணன் மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

2024-2025-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:- 

திருச்சி விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்ட பின்பு மென்பொருள் தொடர்பான பணியாளர்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாநகராட்சியில் ரூ.92 கோடியே 784 லட்சம் 94 ஆயிரம் செலவில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.16 கோடி மதிப்பில் குளுகுளு வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருப்பு கூடம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி பெற்று, தொழில் நுட்ப அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

கொட்டப்பட்டு பெரிய குளம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வோர் மற்றும் பொதுமக்கள் செல்பி எடுக்க செல்பி பாயிண்ட் மற்றும் பல்வேறு வசதிகளுக்கு பணிகள் மேற்கொள்ள ரூ.9.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த சந்தை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.161 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனரின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் 40 ஆயிரத்து 880 சதர அடி நிலப்பரப்பில் ரூ.41 கோடியில் கலைஞர் நூற்றாண்டு கட்டிடம் கட்டும் பணிக்கு உரிய நிர்வாக அனுமதி கோரி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் அலுவலக கட்டிடங்கள் 41.37 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதிக்காக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்கும் தலா ரூ.40 லட்சம் சாலை பணிகளுக்காகவும், ரூ.50 லட்சம் மழைநீர் வடிகால் அமைப்பதற்காகவும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.தெருவோர வியாபாரிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அதனடிப்படையில் கமிட்டி அமைப்பதற்கும், தேர்தல் நடத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டி மூலம் தெருவோர வியாபாரிகள், வியாபாரம் நடத்துவதற்கு உரிய பகுதிகளை கண்டறிவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

முதற்கட்டமாக யானைக்குளம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், அப்பகுதியில் செயல்படும் பர்மா பஜார் வியாபாரிகளுக்கென Street Vending Zone அமைத்து, வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், வழிவகை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலரண் சாலையில் பன்னடுக்கு வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, மேலரண்சாலை “வாகனங்கள் நிறுத்தக் கூடாத மண்டலம்” (No parking zone) என அறிவிக்கப்படும். தெப்பகுளம் முதல் இப்ராஹிம் பூங்கா வரை ஐந்து வார்டு அலுவலகங்களிலும் இடவசதிக்கேற்ப Food Street அமைப்புகள் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்    

மாநகராட்சிப் பள்ளிகளில் இட வசதிக்கேற்ப எல்கேஜி, யுகேஜி வகுப்பிற்கென தனி கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதிக்கும் அறையில், விடுபட்ட மருத்துவமனைகளில் குளிர்சாதன வசதிகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.140.00 கோடி மதிப்பீட்டில், சுமார் 250 கி.மீ நீளத்திற்கு BT / CC / paver block சாலைகள் (End to End roads) அமைக்கப்படும் / புதுப்பிக்கப்படும் / சீரமைக்கப்படும்.

இவ்வாறு திருச்சி மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. திருச்சி மாநகராட்சியின் (2024-25)-ம் நிதி ஆண்டுக்கான மொத்த வருவாய் ரூ.1,023 கோடியே 15 லட்சத்து 13 ஆயிரம், செலவு 1,022 கோடியே 41 லட்சத்து 83 ஆயிரம், உபரி வருமானம் ரூ.73 லட்சத்து 30 ஆயிரம் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision