திருச்சியில் மின்சாரம் தாக்கி ஆசிரியர் பலி

திருச்சியில் மின்சாரம் தாக்கி ஆசிரியர் பலி

திருச்சி மாவட்டம், முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (33). இவர் தா.பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஆங்கில வழி பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி கிருஷ்ணவேணி என்ற மனைவியும், இரண்டரை வயதுள்ள பவிஷ்னா என்ற மகளும், ஒரு வயதுள்ள கார்த்திக்கிருஷ் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியர் பெரியசாமி வயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவர் செல்லும் வழியில் அறுந்து கிடந்த மின் கம்பி மோதியதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரியத்தினர் மின் சப்ளையை துண்டித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பெரியசாமியின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு ஜெம்புநாதபுரம் போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த பெரியசாமியின் உறவினர்கள் அவரது சடலத்தை வாங்க மறுத்ததுடன், தமிழக அரசு பெரியசாமியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும். பட்டதாரியான அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மருத்துவமனை வளாகத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டதால் முசிறி தாசில்தார் பாத்திமா சகாராஜ், மற்றும் தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், தலைமையிலான போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மின்சாரம் தாக்கி தனியார் பள்ளி ஆசிரியர் இறந்து போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision