திருச்சி மாநகரில் பயங்கர தீ விபத்து

திருச்சி மாநகரில் பயங்கர தீ விபத்து

திருச்சி மாநகரம் முழுவதும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது இதற்காக ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு ராட்சதக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான பொருட்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திருச்சி சங்கலியாண்டபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிக்கு தேவையான பொருட்கள் அங்குள்ள காலி மனையில் வைக்கப்பட்டிருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென எறிந்ததால் தீயை அணைக்க பொதுமக்களால் முடியவில்லை.

இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த கட்டுக்கடங்காத தீயால் கரும்பு புகை அதிகளவு வெளியேறியது. சங்கிலியாண்டபுரம் பகுதி சுற்றி இரண்டு கிலோமீட்டர் தூரம் கரும்புகை காணப்பட்டது. இதனால் திருச்சி மாநகரில் பெரியளவில் தீ விபத்து ஏற்பட்டது என பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர். இதில் காலி மனையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO