இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கல்லூரி மாணவிகளிடம் நகை, பணம் பறித்த திருச்சி இளைஞர் கைது

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கல்லூரி மாணவிகளிடம் நகை, பணம் பறித்த திருச்சி இளைஞர் கைது
சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் தனது பெற்றோருடன் வந்து நேற்று புகார் மனு அளித்தார். அந்த புகாரில், தன்னிடம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த விஷ்வா (வயது 29) என்பவர் தன்னை காதலிப்பதாக கூறி தன்னுடன் பழகி வந்ததாகவும், அதன்பிறகு தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்துக் வைத்து கொண்டு, அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி தன்னிடம் இருந்து 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், மடிக்கணினி, ஐ-போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாகவும் கூறி இருந்தார்.

இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சியாமளாதேவி வழக்குப்பதிவு செய்து, விஷ்வாவை மடக்கி பிடித்தனர். அவரது வீட்டில் இருந்து மடிக்கணினிகள், செல்போன்கள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் பழகி அவர்களை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

இவ்வாறு அவர் வீசிய வலையில் சிக்கிய பெண்களிடம் உல்லாசமாக இருந்து, அதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். அந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும், மாணவிகளின் பெற்றோரிடம் காண்பித்து விடுவேன் என்றும் அவ்வப்போது மிரட்டி அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளார். இதுவரை சென்னையை சேர்ந்த மாணவி உள்பட ஏராளமான பெண்களிடம் பல லட்சக்கணக்கான ரூபாய் பறித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அவரது மடிக்கணினியில் 30-க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களும் இருந்தன. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக அவர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை மயக்கி காதல் வலையில் வீழ்த்தி நகை, பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 மடிக்கணினி, 2 செல்போன்கள். நகைகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட விஷ்வாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO