திருச்சியில் ரவுடி என்கவுண்டர் ஏன்? எப்படி?

திருச்சியில் ரவுடி என்கவுண்டர் ஏன்? எப்படி?

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார் லாரி டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி இவர்களது மகன்கள் மூத்தவர் தங்கவேல், இளையவர் ஜெகன் என்கின்ற கொம்பன் ஜெகன் (38). இவருக்கு மனைவி ஒரு மகள் உள்ளனர். 12ம் வகுப்பு வரை படித்த ஜெகன், திருச்சி டோல்கேட், மணச்சநல்லூர், பாண்டிச்சேரி, சேலம், நாமக்கல் போன்ற இடங்களில் நேரடியாகவும், கூலிப்படையாகவும், 11 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்.

மேலும் கூலிப்படையாக செயல்பட்டது, கட்டப்பஞ்சாயத்து அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால், அவர் தலைமறைவாக இருந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாருக்கு, ரவுடி ஜெகன் சிறுகனூர் அருகே, சனமங்கலம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனிப்படை போலீசார், அந்தப்பகுதிக்கு சென்று ரவுடியை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் பிடிக்க முயன்ற போது, எஸ்.ஐ. வினோத்தை ரவுடி அரிவாளால் வெட்டி விட்டு தப்பிக்க முயன்றார்.

உடனே, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் கருணாகரன் பாதுகாப்புக்காக வைத்திருந்த கைத் துப்பாக்கியால் சுட்டார். அதில், ரவுடி ஜெகன் மீது 2 குண்டுகள் பாய்ந்து காயமடைந்தார். போலீசார் அவரைப் பிடித்து லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் சுட்டதில் படுகாயமடைந்த, ரவுடி ஜெகன் மருத்துவமனையில் உயிரிழந்தார். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision