பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை பிடித்து விற்பனை செய்ய முயன்ற 2 பெண்கள் உட்பட்ட 5 நபர்கள் கைது

பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை பிடித்து விற்பனை செய்ய முயன்ற 2 பெண்கள் உட்பட்ட 5 நபர்கள் கைது

திருச்சி மாநகரில் பிரதான கடைவீதிகள், மார்க்கெட் சந்தைகளில் பச்சை கிளிகள் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் திருச்சி மலைக்கோட்டை கடைவீதி, காந்தி மார்க்கெட், பொன்மலை சந்தை, உறையூர் மீன் மார்க்கெட் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திருச்சி பாலக்கரை கீழப்புதூர், குருவிக்காரன் தெருவில் அதிரடியாக சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் 1. தனிஷ் சகாய ஜென்சி, 2. சாந்தி, 3. மணிகண்டன், 4. கார்த்திக், ஆகியோர் தங்களது வீட்டில் விற்பனைக்காக பச்சைக்கிளிகள் 108 மற்றும் முனியாஸ் 30 பறவைகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கூண்டு கம்பி-5, வலைகள் -2 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிடிபடட்வர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை வேட்டையாடி கொடுத்த கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் மேட்டுமருதூர் கிராமத்தை சேர்ந்த திருஞானம் என்பவரது வீட்டை சோதனை செய்து அவரிடமிருந்து 8 முனியாஸ் பறவைகள், வேட்டைக்கு பயன்படுத்திய இரு சக்கர மோட்டார் வாகனம் மற்றும் வலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் மீது இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு 2 உட்பிரிவு 1 பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் விலங்கு, பிறகு 2 உட்பிரிவு 36 இன் படி அட்டவணை II வரிசை எண் 235 ல் பச்சை கிளியும் வரிசை எண் 235ல் முனியாஸ் வகைப்படுத்தப்பட்டுள்ளன .பிரிவு 39 படி வன உயிரினங்கள் மற்றும் வேட்டைக்கு பயன்படுத்திய கருவிகள் அரசின் சொத்து, பிரிவு 48 படி பிடியில் இருக்கும் வன உயிரினங்கள் வணிகம் செய்ய தடை. 49 A இன் படி வன உயிரின காப்பாளரின் அனுமதியின்றி வன உயிரினங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் கொண்டு செல்ல தடை .பிரிவு 50 படி கைது செய்து 51 வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 2 ஆஜர்படுத்தி 15 நாள் அடைப்பு காவல் உத்தரவு பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேற்படி தனிக்குழுவில் உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார் ,வன சரக அலுவலர்கள் கோபிநாத், தினேஷ், உசேன் வனவர்கள் பாலசுப்ரமணியன், துளசிமலை, சரண்யா, கஸ்தூரிபாய், வனக்காப்பாளர்கள் சரவணன், அரவிந்த், கருப்பையா, ஜீவானந்தம் ,சுமதி, நஸ்ருதீன் வன காவலர் சுகன்யா இடம் பெற்றிருந்தனர். 

மாவட்ட வன அலுவலர் கூறுகையில் பொதுமக்கள் பச்சைக்கிளிகளை விரும்பி வாங்குவதால் குற்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. பச்சை கிளிகளை விற்பதும் வாங்குவதும் ஜாமுனில் வர முடியாத 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும் .இது குறித்து தகவல் ஏதும் இருப்பின் வனச் சரக அலுவலர் திருச்சி அலைபேசி எண் 9443649119 ல் தொடர்பு கொள்ளவும் தங்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். கடந்த இரண்டு வருடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மிகப்பெரிய சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision