தந்தையிடம் கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்ட திருச்சியில் கல்லூரி மாணவன்

தந்தையிடம் கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்ட திருச்சியில் கல்லூரி மாணவன்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் அபிபோஸ்பான் (வயது 20). இவர் கடந்த 2 மாதமாக திருச்சி உய்யகொண்டான் திருமலை கணபதி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேசன் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாகவே இவர் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அபிபோஸ்பான் தனது தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு, நீங்கள் சாப்பிட்டீர்களா?. நான் சாப்பிட்டுவிட்டேன். எனக்கு மனசு சரியில்லை என்று கூறி உள்ளார்.

சிறிதுநேரம் கழித்து தனது தந்தையின் செல்போனுக்கு, "எனக்கு வாழப்பிடிக்கவில்லை. படிக்க பிடிக்கவில்லை. நான் சாகப்போகிறேன்" என்று உருக்கமாக பேசியுள்ளார். இதை கேட்டு பதறிப்போன அவரது தந்தை, மகனின் நண்பருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவரது அறைக்கு சென்று பார்க்கும்படியும் கூறி உள்ளார். இதையடுத்து அங்கு சென்று கதவை திறந்து பார்த்தபோது, அபிபோஸ்பான் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அபிபோஸ்பான் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவன் முற்போக்கு கருத்துகளை கொண்ட புத்தகங்களை அதிகம் படிப்பதாகவும், கல்லூரியில் சக மாணவர்களிடம் இது குறித்து விவாதம் செய்து பேசி உள்ளதாகவும், சில நேரங்களில் தனக்குத்தானே பேசிக்கொண்டு இருப்பதை சக மாணவர்கள் தெரிவித்ததாக காவல்துறை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO