மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி-மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி-மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடி சுங்கச்சாவடி அருகே திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை துவாக்குடி போலீசார் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த பொழுது போலீசாரை கண்டதும் அங்கிருந்து 3 மர்ம நபர்கள் தப்பி ஓடி உள்ளனர்.

உடனே போலீசார் மதுபானக் கடைக்கு சென்று பார்த்த பொழுது மதுபான கடையை பூட்டி இருந்த 4 பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. ஒரு பூட்டு பூட்டியது மட்டும் உடைக்கப்படாமல் இருந்துள்ளது. உடனடியாக போலீசார் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ராம்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு வந்த ராம்குமார், போலீசாருடன் சேர்ந்து கடையை திறந்து பார்த்த பொழுது கடையிலிருந்து பணம் மற்றும் மதுபானங்கள் திருட்டுப் போகவில்லை என்பது தெரியவந்தது.

இந்த ஒரு பூட்டை மட்டும் உடைத்து இருந்தால் கடையில் இருந்த ரூபாய் 4 லட்சம் பணம் மற்றும் மதுபானங்கள் கொள்ளை போயிருக்கும் என்றும், அதற்குள் போலீசார் வந்ததால், அவர்கள் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதால் நாலு லட்சம் பணம் மற்றும் அரசு மதுபான பாட்டில்கள் தப்பியது தெரியவந்தது. சம்பவ இடத்தில் ஒரு கடப்பாரை, ஒரு டிவிஎஸ் 50 வாகனத்தையும் துவாக்குடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த அரசு மதுபான கடையில் வாட்ச்மேனாக வேலை பார்க்கும் ஆண்டவர் (65) கடை மாடியில் படுத்திருந்துள்ளார். அவரை போலீசார் தான் சென்று எழுப்பி உள்ளனர்.

மேலும் அரசு மதுபான கடை வெளியில் இருந்த சிசிடிவி கேமரா பழுதாகி உள்ளது தெரியவந்தது. இந்நிலையில் கடையின் உட்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தடைய அறிவியல் நிபுணர்கள் குற்றவாளிகளின் கைரேகைகளை ஆய்வு செய்துபதிவு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn