நிலமோசடி புகாரில் தொழிலதிபர் வீட்டில் சோதனை - வீட்டை பூட்டிக்கொண்டு எதிர்ப்பு

நிலமோசடி புகாரில் தொழிலதிபர் வீட்டில் சோதனை - வீட்டை பூட்டிக்கொண்டு எதிர்ப்பு

திருச்சி மாநகர், புறநகர் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொது மக்களின் நிலங்களை அபக ரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் "ஆபரேசன் அகழி" என்ற பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

குற்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் நபர்களின் முதல் பெயர் பட்டியல் கடந்த மாதம் 19ம் தேதியும், 2-வது பெயர் பட்டியல் கடந்த 8ம் தேதியும் தயார் செய்து அவர்களது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, பல்வேறு ஆவணங்கள், கணக்கில் வராத பணம், நகைகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த ஆபரேஷன் அகழி நடவடிக்கையால் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில், பெற்ற மனுக்களின் தகவலின் அடிப்படையில் 3 மற்றும் 4-வது 5 பெயர் பட்டியல் (லிஸ்ட்) தயார் செய்யப்பட்டு சோதனைக்கான ஆயத்த பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் மோகன் பட்டேல். இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் நிலம் தொடர்பான பல்வேறு தொழில் செய்து வருகிறார். இவர் மீது நில மோசடி தொடர்பான மாவட்ட குற்ற பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்திரவிட்டார். இதையடுத்து எஸ்.ஐ ரெஜி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட பெண் போலீசார் அவரது வீட்டிற்கு நேற்று இரவு 8 மணிக்கு சென்று சோதனை நடத்த முயன்றனர்.

அப்போது மோகன் பட்டேல் வீட்டில் இல்லை. அவரது மகள்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர். மேலும் வீட்டை சோதனை நடத்த அவரது மகள்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு போலீசார் எங்களிடம் சோதனை நடத்துவதற்கான போலீஸ் சூப்பிரண்டின் கடிதம் உள்ளது என்று கூறினர். இதில் அவர்கள் சோதனை நடத்த கோர்ட்டு அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே எங்களது விட்டை சோதனை நடத்த வேண்டும் என்று கூறி வீட்டை உன்பக்கமாக பூட்டிவிட்டனர்.

இதையடுத்து அவரது வீட்டு முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும் கோர்ட்டு உத்தரவு வரும் வரை போலீசார் விடிய விடிய காத்திருந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக அவரது நண்பர் ரவி என்பவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision