மொபைல் போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக அதிகரிப்பு

மொபைல் போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக அதிகரிப்பு

ரயில்களின் பயணம் செய்ய முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் ரயில் நிலைய பதிவு அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தன. பின்பு பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் பயணச்சீட்டு பெற தானியங்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மொபைல் போனிலே பயணச்சீட்டு பதிவு செய்யும் முறை அமுலுக்கு வந்தது.

காகிதம் பயன்படுத்தாமல் பயணச்சீட்டு பதிவு செய்யும் இந்த முறை சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதாக பாராட்டு பெற்றது. பயணிகளின் வசதிக்காக மதுரைக் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் மொபைல் போன் மூலம் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டு பதியும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய திட்டத்தை பற்றி விளக்கி கூறவும் பிரச்சாரம் செய்யவும் மூத்த ஊழியர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்களும் இந்த மொபைல் போன் செயலி பற்றிய விபரங்களை பயணிகளுக்கு விளக்கி கூறினர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 26,000 பயணிகள் மொபைல் போன் பயணிச் சீட்டுகள் மூலம் பயணம் செய்தனர்.

தீவிர பிரச்சாரம் காரணமாக இந்த எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 53000 ஆக உயர்ந்தது. இந்த சாதனையை எட்ட காரணமாக இருந்த ஊழியர்களுக்கு மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் டி. எல். கணேஷ் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். அப்போது உதவி கோட்ட வர்த்தக மேலாளர்கள் பாலமுருகன், மணிவண்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர். 

யூடிஎஸ் மொபைல் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம் : செயலியில் நமது மொபைல் எண்ணை உள்ளீடு செய்து ஓ.டி.பி. எண் பெற்று உள் நுழையலாம். இதனால் பாஸ்வேர்டு என்ற சங்கேத வார்த்தையை ஞாபகம் வைத்திருக்க வேண்டியதில்லை. ரயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் தூரத்திற்கு அப்பால் வீட்டிலிருந்தபடியே எந்த ஒரு ரயில் நிலையத்திலிருந்தும் எந்த ஒரு ரயில் நிலையத்திற்கும் பயணச்சீட்டு பதிவு செய்யலாம். இருந்தபோதிலும் அந்தப் பயணச்சீட்டை பதிவு செய்த நேரத்தில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் அல்லது பயணம் துவங்கும் நிலையத்தில் இருந்து புறப்படும் முதல் ரயில் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

முன்பு 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து மட்டுமே பயணச்சீட்டு பதிவு செய்யும் வசதி இருந்து வந்தது. ரயில் நிலையத்திற்குள் வந்து விட்டால், 'க்யூ ஆர்' கோடு பயன்படுத்தியும் பயண சீட்டு பதிவு செய்து கொள்ளலாம். இது புதிய வசதிகள் மூலம் பயணிகள் மொபைல் போனில் எளிதாக பயண சீட்டு பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் மொபைல் போன் பயணச்சீட்டு மூலம் பயணம் செய்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision