பேஸ்புக் பதிவு - திருச்சி வாலிபர் கைது

பேஸ்புக் பதிவு - திருச்சி வாலிபர் கைது

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூரை சேர்ந்தவர் செளபர் அலி (28). இவர் எலெக்ட்ரிஷியனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில், "என் மரண செய்தியை நீங்கள் அறிந்தால் என் மறுமை வாழ்க்கைக்காக நல்ல முறையில் பிரார்த்தனை செய்யுங்கள்" என்ற வாசகத்தை பதிவிட்டிருந்தார்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜமீஷா முபின் வாட்ஸ்அப் வைத்திருந்தது போன்றே இந்த வாசகம் இருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து செளபர் அலியின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகப்படும் படியான எந்தப் பொருளும் சிக்கவில்லை.

மேலும் அவரது செல்போனை கைப்பற்றிய சைபர் கிரைம் போலீசார், அதில் உள்ள விவரங்களை சேகரித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே இனாம்குளத்தூரைச் சேர்ந்த 2 நபர்கள் ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் ஏற்கெனவே தொடர்பில் உள்ளதாக சந்தேகத்திற்கிடமான இரண்டு பேரிடம் திருச்சி மாவட்ட காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிட்டதக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH           

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO