மனைவியை கொலை செய்த கணவன் தற்கொலை - போலீசுக்கு தெரியாமல் இருவரது சடலத்தையும் எரியூட்ட முயன்ற உறவினர்கள்

மனைவியை கொலை செய்த கணவன் தற்கொலை - போலீசுக்கு தெரியாமல் இருவரது சடலத்தையும் எரியூட்ட முயன்ற உறவினர்கள்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை ஒன்றியம் அஞ்சலம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கட்ராமன் (55) இவரது மனைவி சரஸ்வதி (50). பாம்பு கரடு  அருகே வயலில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இருவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் திருமணம் ஆன நிலையில் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். திருமணமான மகள் அவரது கணவருடன் வெளியூரில் வசித்து வருகின்றார்.

இவரது வயலில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக வெங்கட்ராமன் அண்ணனுடன் பிரச்சனை இருந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக செலவு செய்வதற்கு கடந்த வாரம் ஆடுகளை விற்று சரஸ்வதி, கணவன் வெங்கட்ராமனிடம் பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் வழக்கு தொடர்பாக பணம் தேவைபட்டதால்
மனைவியிடம் கறவை மாட்டை விற்று பணம் தருமாறு வெங்கட்ராமன் கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு சரஸ்வதி மறுப்பு தெரிவித்ததால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கட்ராமன் மனைவி சரஸ்வதியை  அரிவாளால் கழுத்தில் வெட்டியுள்ளர். இதில் படுகாயமடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்து போனார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கட்ராமன் அருகில் இருந்த மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழியாக ஆடு, மாடுகள் மேய்க்க சென்றவர்கள் வெங்கட்ராமன் தூக்கில் சடலமாக தூங்குவதையும், சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும் பார்த்து கிராமத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் சடலத்தை எரியூட்ட முடிவு செய்து இருவரின் உடலையும் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி போலீஸ் டிஎஸ்பி அருள்மணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை மற்றும் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விவசாயி தனது மனைவியை வெட்டிக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO