நான் சாதாரண சிறிய ஆள் - திருச்சியில் அமைச்சர் நேரு பேட்டி

நான் சாதாரண சிறிய ஆள் - திருச்சியில் அமைச்சர் நேரு பேட்டி

திருச்சியில் ரூபாய் 420 கோடி மதிப்பீட்டில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ள பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பிறகு தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்.... திருச்சி மக்களின் நீண்ட நாளான கோரிக்கை கனவாக இருக்கக்கூடிய ஜங்ஷன் மேம்பாலத்தின் பணிகள் தற்போது முற்றிலுமாக முடிவடைந்து உள்ளது. வரும் 29ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

டெண்டர் எடுத்தவர்களிடம் காலதாமதத்திற்கு காரணம் என்னவென்று கேட்டபோது ஆட்கள் பற்றாக்குறை, வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது யாரும் பணிக்கு வருவதில்லை ஆகையால் தான் இந்த காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் அடுத்த ஆறு மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளோம்.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், உயர்மட்ட மேம்பாலம், புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் என எண்ணற்ற திட்டங்களை திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறோம். 

அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சர்களுடன் அமெரிக்கா பயணம் சென்றார். ஆனால் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை எந்த தொழிலையும் கொண்டு வரவும் இல்லை. ஆனால் தற்போது நமது முதலமைச்சர், சிங்கப்பூர் பயணம் செல்லும் போது தொழில்துறை சேர்ந்த அதிகாரிகளை உடன் அழைத்து சென்றுள்ளார்.  

தமிழ்நாட்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை ஏற்கனவே கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார் . இந்நிலையில் தற்போது இந்த சிங்கப்பூர் பயணம் பல்வேறு தொழில் திட்டங்களை நிச்சயம் தமிழகத்திற்கு கொண்டு வருவார். என்ன செய்தாலும் குறை மட்டுமே கூறுவார்கள் ஏனென்றால் அவர்கள் எதிர்க்கட்சி. அவர்கள் எப்படி பாராட்டுவார்கள் எப்போதுமே குறைகள் மட்டுமே கூறுவார்கள். நல்ல விஷயங்களை தமிழ்நாட்டிற்கு செய்வதற்காக தான் முதலமைச்சர் இந்த சுற்றுப்பயணம் சென்றுள்ளார் அதை கிண்டல் செய்வது குறை கூறுவது தவறு. 

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு திமுக மட்டும் அல்ல தோழமைக் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் நிச்சயம் கலந்து கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இதை குறை கூறினால் என்ன அர்த்தம். நான் ஒரு சிறிய ஆள் திருச்சி சம்பந்தமான செய்திகளை மட்டும் என்னிடம் கேளுங்கள் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் பொதுப்பணித்துறை துறை அதிகாரிகள், ஆகியோர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn