வட்டி பணம் கேட்டு ஓட்டுனர் கடத்தல் - இரண்டு தினங்களாக சித்திரவதை

வட்டி பணம் கேட்டு ஓட்டுனர் கடத்தல் - இரண்டு தினங்களாக சித்திரவதை

திருச்சி மாவட்டம் முசிறி சுண்ணாம்புக்கார தெருவில் வசிக்கும் ராஜசேகர் மகன் கண்ணன் (36) ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கள்ளத்தெருவில் வசிக்கும் நாராயணன் மகன்கள் ராஜபாண்டி 44, ஸ்ரீராம் 35 ஆகியோரிடம் 10 வட்டிக்கு ரூபாய் 30,000 பணம் வாங்கி உள்ளார். அதற்கான வட்டி தொகை என தொடர்ந்து கட்டி வந்த நபர் தற்போது மூன்று மாதமாக வட்டி பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கண்ணன் மீது உள்ள ஒரு வழக்கு சம்பந்தமாக முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி வெளியில் வரும் பொழுது ராஜபாண்டி தம்பி ஸ்ரீராம் என்பவர் கண்ணனை அழைத்துக் கொண்டு அவரது இல்லத்திற்கு அழைத்து சென்று கண்ணனை அடைத்து ஸ்ரீராம் மற்றும் அவரது அண்ணன் ராஜபாண்டி இருவரும் சேர்ந்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்துள்ளனர். மேலும் ராஜபாண்டி அவரது நண்பர்களை ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் அட்மிஷனுகாக செல்லும்போது கண்ணனையும் காரில் அழைத்துச் சென்று துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.

கண்ணன் மனைவி தங்கவல்லி மற்றும் இவர்களது குழந்தை லிகிஸ் (8), தர்ஷன் (7) ஆகிய மூவரையும் ஸ்ரீராம் வீட்டிற்குள் அடைத்து பூட்டி சென்றுள்ளார். குழந்தைகள் கூச்சலிட்டு கத்திய பொழுது அருகில் குடியிருந்தவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்து தங்கவள்ளி முசிறி காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார் தங்கள் மீது புகார் செய்யப்பட்டதை அறிந்து கண்ணனை, ராஜபாண்டி, ஸ்ரீராம் விடுவித்துள்ளனர். இரு தினங்களாக அடித்தும், துன்புறுத்தியும், சிறுநீர் கழிக்க கூட விடாமல், குடிதண்ணீர் கூட வழங்காமல் சித்திரவதை செய்து உடல்நிலை பாதிக்கப்பட்டு முசிறி அரசு மருத்துவமனையில் கண்ணன் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் காவல் உதவி ஆய்வாளர் கார்த்தியிடம் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாண்டி, ஸ்ரீராம் ஆகிய இருவர் மீதும் ஆள்கடத்தல், அடித்து துன்புறுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து தப்பி சென்ற இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் பிரபல விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவின் தங்கை மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐய்யாக்கண்ணுவின் பெயரை பயன்படுத்தி பல்வேறு குற்ற சம்பவங்களில் இவர்கள் ஈடுபடுவதும் என கூறப்படுகிறது. இச்சம்பவம் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision