திருமண மண்டபம் உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருமண மண்டபம் உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் தகவல்

குழந்தைத் திருமண தடைச் சட்டம் 2006-ன் படி 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் செய்வது குழந்தை திருமணம் ஆகும். குழந்தை திருமணத்தை நடத்தி வைப்பதும் அதற்கு உறுதுணையாக இருப்பதும் திருமணத்தில் கலந்து கொள்வதும் சட்டபடி குற்றமாகும். திருமணங்கள் கோவில்கள், திருமண மண்டபங்கள், தேவாலயங்கள், மசூதிகளில் நடைபெறுகின்றன.

எனவே மேற்கூறிய இடங்களில் திருமணம் நடைபெறுவதற்கு கோவில் நிர்வாகிகள் மற்றும் தேவாலயங்கள் மசூதிகள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் மணமக்களின் வயது சான்றிதழை (பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ்) கட்டாயம் பெற வேண்டும். மேலும் பெண்ணிற்கு 18 வயதும், ஆணிற்கு 21 வயதும் நிறைவடைந்து உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் குழந்தை திருமண தடை சட்டம் 2006-ன் படி 2 வருடம் சிறை தண்டனையும், ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும். திருமண மண்டபம் உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் அனைவருமே நமது சமுதாயத்தில் குழந்தை திருமணம் நடக்காமல் இருக்க சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

குழந்தை திருமணம் நடப்பது அல்லது அதற்கான ஏற்பாடுகள் செய்வது தெரிய வந்தால் குழந்தைகள் உதவி எண் 1098 என்ற எண்ணிற்கோ மற்றும் மகளிர் உதவி 616301181 என்ற எண்ணிற்கோ தகவல் தெரிவிக்கலாம். மேலும் மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் 0431 2413796 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம். தங்களது விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். பள்ளி தலைமையாசிரியர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் காவல் துறை அலுவலர்கள் அனைவரும் குழந்தை திருமணத்தை தடுப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக மாற்றுவோம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision