முத்தரையர் சமூக மாணவர்களுக்கு இலவச உயர்கல்வித் திட்டத்தில் இடம் ஒதுக்கப்படும் - பெரம்பலூர் மக்களவைத் தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி

முத்தரையர் சமூக மாணவர்களுக்கு இலவச உயர்கல்வித் திட்டத்தில் இடம் ஒதுக்கப்படும் - பெரம்பலூர் மக்களவைத் தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர் மாவட்டம் குளித்தலை சுங்கவாயில் அருகே தமிழர் தேசம் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவரான கே.கே.செல்வகுமார் ஏற்பாடு செய்திருந்த அந்த பொதுக்கூட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பெரம்பலூர் மக்களவைத் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், கட்சியை வலுப்படுத்தவும், அடையாளம் காணச்செய்யவும், தேர்தல் நேரத்தில் சரியான முடிவை தமிழர் தேசம் கட்சியின் நிறுவன தலைவரான கே.கே.செல்வகுமார் எடுத்திருப்பதாகத் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்பது பெருமைக்குரிய விஷயம் எனக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் முத்தரையர்கள் பெரிய அளவில் இருந்து கொண்டு, அரசியல் அடையாளம் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு கொடி பிடித்துக்கொண்டு, சேவகம் செய்த நிலை மாறவேண்டும் என பாரிவேந்தர் பேசினார்.

அதற்காக சரியான நேரத்தில் தமிழர் தேசம் கட்சியை தலைவர் கே.கே.செல்வக்குமார் ஆரம்பித்திருக்கிறார். நாட்டை பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருவதால், உலக நாடுகள் இந்தியாவை பெருமையோடு பார்க்கிறது என புகழாரம் சூட்டினார். தேர்தலில் வெற்றிபெற்ற உடன், தமிழர் தேசம் கட்சி சார்பில் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றித் தருவேன் என வாக்குறுதி அளித்தார். தனது சொந்த நிறுவனங்கள் மூலம் கிடைத்த வருவாயிலிருந்து கடந்தமுறை ஏழை - எளிய குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வியை வழங்கியதாக சுட்டிக்காட்டிய டாக்டர் பாரிவேந்தர், அதில் படித்த மாணவர்கள் பொறியாளர்களாக, வணிக மேலாண்மை, வேளாண் பொறியியல், சட்டம் உள்ளிட்ட துறைகளில் படித்து பட்டம்பெற்று முன்னேறி இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

இந்தமுறையும் இலவச உயர்கல்வித் திட்டம் தொடரும் எனத் தெரிவித்த டாக்டர் பாரிவேந்தர், அதில் முத்தரையர் சமூகத்தை சேர்ந்த 200 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையருக்கு வெண்கலச் சிலை அமைத்துக் கொடுப்பேன் என டாக்டர் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision