ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சந்திரபுஷ்கரணியில் நம்பெருமாள் தீர்த்தவாரி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சந்திரபுஷ்கரணியில் நம்பெருமாள் தீர்த்தவாரி

108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 12ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல் பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோயிலின் 2ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்விய பிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 23ம் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய் மொழிப்பாசுரங்களை கேட்ட படி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

ராப்பத்து உற்சவத்தின் 10ம் நாளான இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரர் உடன் வந்தார். அங்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராடினார். நம்பெருமாள் கரையில் 'நின்ற வாறு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரியை கண்டருளுளினார்.

இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் தீர்த்தபேரர் பரமபத வாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைந்தார். நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்தார். அங்கு மதியம் 1.30 மணிமுதல் மாலை 6.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெறுகிறது.

பின்னர் மாலை பொதுஜன சேவையுடன் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision