6 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

6 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

திருச்சிக்கு அழகு சேர்த்தது மலைக்கோட்டை மட்டுமல்ல, நகருக்குள் வலம் வந்து வளம் சேர்த்த உய்யக்கொண்டான் கால்வாயும் ஆகும். இந்தக் கால்வாய்க்கு நீண்ட வரலாறும் பெருமையும் உண்டு. விவசாயிகளுக்கான கொடையாகத் திகழ்ந்த இந்தக் கால்வாய் ராஜராஜ சோழனால் வெள்ள காலத்தை மனதில் கொண்டு 1,200 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலத் தொழில்நுட்பத்தின் உதவியோடு வெட்டப்பட்டதாகும். மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராஜராஜ சோழனின் சிறப்புப் பெயர்களில் ஒன்றான 'உய்யக்கொண்டான்' எனும் பெயரையே இக்கால்வாய்க்கு சூட்டினர். பெட்டைவாய்த் தலையிலிருந்து பிரிந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குள் 8 கிமீ பாய்ந்து வாழவந்தான்கோட்டை ஏரி வழியாக, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேராண்டி ஏரியுடன் முடிவடைகிறது. 

இக்கால்வாய் சுமார் 71கி.மீ. நீளமும், 120 கிளை வாய்க்கால்களும் உடைய இந்த கால்வாய் மூலம் 32,742 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன. பலநூறு ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருந்து மக்களுக்கு பலன் கொடுத்து வந்த இந்தக் கால்வாய் காலப்போக்கில் நாகரிக வளர்ச்சியில் குப்பைகளும், கழிவுநீரும் கலந்து சாக்கடையாகவே மாறிவிட்டது தான் பரிதாப நிலை. முப்போகம் விளையக் காரணமான இக்கால்வாயை இப்போது மூக்கை மூடி கடக்கிறார்கள் மக்கள். திருச்சி மாநகரின் பெரும்பகுதி கழிவுநீர் மற்றும் குப்பைகளின் புகலிடம் இக்கால்வாய் தான். இதன்விளைவு கரைகளை மறைத்து வளர்ந்த கருவேல மரங்கள். கால்வாய் முழுவதும் காட்டாமணக்கும், ஆகாய தாமரையுமாய் செடி, கொடிகள் மண்டிக் கிடக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில், 11 கோடி ரூபாய் செலவில் உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைக்கப்படும் என அறிவித்தார். இந்த பணத்தில் இரண்டு பக்கமும் கிணறு போன்று சுவரை கட்டி விட்டனர். தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்த இந்த பகுதியில் பெரிய சாக்கடை கிணறு போன்று மாறியது. இதனை தடுக்கும் விதமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் 6 மாதங்களுக்கு ஒருமுறை கால்வாய் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டது. கால்வாயின்  மாசுபடுதலை அறிந்து கடந்த  ஜூலை 2020ல் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு குறித்து பசுமை தீர்ப்பாயம் ஆனது வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை திருச்சி மாநகராட்சி மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து  கால்வாயை ஆய்வு செய்து நிரந்தர திருத்த நடவடிக்கைகளைத் தொடங்கியது. சுமார் 37 இடங்களில் கழிவுநீர் கால்வாயில் நுழைவதை தடுக்க நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு நிலத்தடி கால்வாய் திட்டம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முன்மொழிந்து உள்ளது என்று மாநகராட்சி தீர்ப்பாயத்தில் தெரிவித்தது. உய்யக்கொண்டான் பகுதியில் 30 ஆண்டு கால  நிலத்தடி கழிவு நீரை சீரமைக்கவும் திருச்சியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை நிலத்தடி நீர் கழிவுகள் கழிவு நீர் நினைத்தால் 94.6 லட்சம் செலவில் மாநகராட்சி முன்மொழிந்தது. உய்யக்கொண்டான் கால்வாய் பராமரிப்பு பணிகள் மே 2023 ம் ஆண்டு முடிவடையும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தண்ணீரின் தரம் அதிக கழிவுநீர் கலந்து தண்ணீர் குளிக்க தகுதியற்றதாக மாறியுள்ளது.நீர் அதிக மாசு அடைந்துள்ளதால்  துரிதமாக வேலைகளைத் தொடங்க வேண்டும் அதுமட்டுமின்றி மாநகராட்சி வடிகாலமைப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் மே 2013 வரையிலான திட்டத்தை மேலும் நீடிக்க கூடாது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி உய்யக்கொண்டான் கால்வாய் முன்னேற்ற அறிக்கை குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn