அத்தை இறுதி நிகழ்வில் கூட பங்கேற்காமல் மக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் தந்த எம்.பி

மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.துரை வைகோ அவர்கள், நேற்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணன் நினைவுச் சின்னத்தில் மாலை அணவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் மாலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம் இரவு வரை நடந்தது. இந்தக் கூட்டத்திலும் எம்.பி. துரை வைகோ அவர்கள் பங்கேற்று பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார். இந்தக் கூட்டத்தில் இருந்தபோதுதான்,
தலைவர் வைகோ அவர்களின் இரண்டாவது சகோதரி சரோஜா அம்மையார் இறப்பு குறித்து செய்தி வருகிறது. கூட்டம் முடிந்தபின்பே இந்த செய்தி எம்.பி. அவர்களிடம் சொல்லப்படுகிறது.இதனிடையே, கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, குன்றாண்டார் கோவில் ஒன்றியம், அண்டக்குளம் கிராமத்தில் வங்கிக் கிளை அமைக்கக் கோரி எம்.பி. துரை வைகோ அவர்கள், நன்றி சொல்ல வந்த சமயத்தில் மக்கள் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்கள்.
இந்தக் கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட எம்.பி. அவர்கள், இதுகுறித்து பல மாதங்களாக தொடர் முயற்சி மேற்கொண்டிருக்கிறார். ஒரு வழியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதற்கட்டமாக வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை அமைப்பதாகவும், அதன்பின்னர் வாடிக்கையாளர்களின் தொடர் ஒத்துழைப்பு இருக்கும் பட்சத்தில், வங்கிக் கிளை அமைப்பதாகவும் வங்கி உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையொட்டி, அண்டக்குளத்தில் இன்று காலை 11 மணிக்கு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உயர் அதிகாரிகளுடன் வாடிக்கையாளர் சேவை மையத்தை எம்.பி. திறந்து வைப்பதாக திட்டமிடப்பட்டது. இதனிடையே திசா கமிட்டி கூட்டத்தை முடித்துவிட்டு வந்த எம்.பி. துரை வைகோ அவர்களிடம்,மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நீங்கள் அத்தை இறப்புக்குச் செல்லுங்கள். வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திறப்பு விழாவினை இன்னொரு நாள் மாற்றி வைத்துக் கொள்ளலாம் என்றனராம்.
உடனடியாக வேண்டாம் இயக்கத் தந்தை தலைவர் வைகோ, அம்மா மற்றும் குடும்பத்தினர் சென்னையில் அத்தை இறுதி நிகழ்வில் பங்கேற்பார்கள். இது பொதுமக்கள் பிரச்சனை. நமது ஊருக்கு வங்கி சேவை மையம் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் உள்ள மக்களுக்கு அது ஏமாற்றம் தரும். இதுதவிர, வங்கி அதிகாரிகள் இன்னொரு நாள் வருவதில் சிரமம் ஏற்படும். ஆகவே, நிகழ்ச்சியை ரத்து செய்யவேண்டாம். திட்டமிட்டபடி நடக்கட்டும் என்றார் எம்.பி. துரை வைகோ அவர்கள்.
எம்.பி. அவர்களின் இந்த பதில் கட்சியினருக்கு பெரும் வியப்பைத் தந்தது. திட்டமிட்டவாறு இன்று காலை திருச்சியிலுள்ள எம்.பி. அலுவலகத்தில் துரை வைகோ அவர்கள், மக்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். திரு.வைகோ அவர்களுக்கு ஏன் மாநிலங்களவை சீட் வழங்கப்படவில்லை என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு மிக உருக்கமாக விடை தந்து, அதன்பின்பு கந்தர்வக்கோட்டை தொகுதி, குன்றாண்டார் கோவில் அருகில் உள்ள குக்கிராமம் அண்டக்குளத்தில் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தைத் திறந்து வைத்து எம்.பி. துரை வைகோ பேசினார். நிகழ்ச்சி முடியவே மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. பின்னர், மாலை விமானம் மூலம் அத்தை வீட்டுக்கு துக்கம் விசாரிக்க புறப்பட்டுச் சென்றார் எம்.பி.
அத்தை இறப்புக்குக் கூட போகாமல்..இறுதி நிகழ்வில் பங்கேற்காமல், அண்டக்குளம் மக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் தந்த எம்.பி. துரை வைகோ அவர்களின் பேருள்ளம் கண்டு கட்சியினரும், பொதுமக்களும் நெகிழ்ந்து மகிழ்ந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision