ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகி மீது சார்பதிவாளர் புகார்

ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகி மீது சார்பதிவாளர் புகார்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் வின்னகரில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இதில் சவரிராஜன் என்பவர் சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள எலந்தப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் திமுக கட்சியில் திருச்சியில் தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவராக உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள நிலங்களை அபகரித்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எலந்தைபட்டி மற்றும் காந்தளூர் பகுதியில் மற்றவருடைய பெயரில் உள்ள நிலத்தை விற்பதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக நிலத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் பிரச்சனைக்குரிய இடத்திற்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது என டிஆர்ஓ உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இடத்திற்கு பத்திரம் செய்து கொடுக்கும்படி தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ரிஜிஸ்டரை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அதன் உச்சமாக இன்று காலை சபரி ராஜன் வழக்கம் போல் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மாரிமுத்து பிரச்சனைக்குரிய இடத்திற்கு பத்திரம் செய்து கொடுக்க சபரி ராஜனை நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. அதற்கு சபரிராஜன் பிரச்சனைக்குரிய இடத்திற்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள இடத்திற்கு தன்னால் பத்திர பதிவு செய்து கொடுக்க முடியாது என கூறியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து சார் பதிவாளர் அலுவலகத்தில் சபரிராஜனை ஆபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்ததோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதை கண்ட ஊழியர்கள் மற்றும் பத்திரப்பதிவிற்காக வந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். திமுக கட்சி மாவட்ட தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு ரிஜிஸ்டரையே அலுவலகத்திற்குள் புகுந்து ஆபாச வார்த்தைகளால் திட்டி இப்படி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சபரி ராஜன் இது சம்பந்தமாக உடனடியாக திருவெறும்பூர் போலீசாரிடம் புகார் செய்தார்.

மேலும் இது சம்பந்தமாக திருச்சி மாவட்ட பதிவாளரிடமும் மாரிமுத்து மீது சபரிராஜன் புகார் செய்துள்ளார். ஏற்கனவே மாரிமுத்து மீது நில அபகரிப்பு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு பெண்மணியிடம் ஆபாசமாக நடந்து கொண்டது சம்பந்தமாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision