திருச்சியில் மூன்று சிறுவர்கள் தற்கொலை முயற்சி

திருச்சியில் மூன்று சிறுவர்கள் தற்கொலை முயற்சி

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள இபி ரோட்டில் சிறுவர்கள் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்களை நீதிமன்றம் உத்தரவு பெற்று இந்த கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படுவார்கள்.

இந்த நிலையில், குற்ற வழக்கில் தொடர்புடைய மூன்று சிறுவர்கள் திருச்சி சிறார் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் பிரபாகரன் குடிபோதையில், சாதியைச் சொல்லித் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக, பாதிக்கப்பட்ட சிறார்கள் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும்,

அந்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், 3 சிறுவர்களும் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. உடைந்த டியூப் லைட்டுகளைக் கொண்டு, மூன்று சிறுவர்கள் தங்களது மார்பு, வயிறு, கை, கால்களில் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரத்த காயங்களுடன் இருந்த அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பாமல், மதுரையிலுள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருச்சியில் மூன்று சிறுவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision