திருச்சி போலீசாரை லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்க வைத்த கும்பல் - மீட்பு குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் பேட்டி

திருச்சி போலீசாரை லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்க வைத்த கும்பல் - மீட்பு குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் பேட்டி

வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த இருவரை திருச்சி மாநகர போலீசார் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன் மற்றும் சங்கர் ஆகிய இரண்டு நபர்களையும், போலீசார் காவலில் எடுத்து, திருடப்பட்ட பொருட்களை மீட்க மாநகர காவல் துறையின் 15 பேர் கொண்ட  தனிப்படையினருடன் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அனுப்பிவைத்தனர்.

ரத்தன் மற்றும் சங்கர் மீது 10 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பறிமுதல் செய்வதற்காக, தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர். தமிழ்நாட்டில் திருடிய நகைகளை விற்று விட்டோம் என்றும், பணமாக கையில் வைத்திருக்கிறோம் என்றும் கொள்ளையர்கள் தரப்பில்  கூறியுள்ளனர். தனிப்படை போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்ய முயற்சித்துள்ளனர்.

குற்றவாளிகள் இருவரையும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு இன்று (06.03.2023) கடைசி நாள். எனவே தனிப்படையை சேர்ந்த உதவியாளர் உள்ளிட்ட மூவர் ரெத்தன் மற்றும் சங்கர் ஆகியோரை திருச்சிக்கு அழைத்து வந்துவிட்டனர். மற்ற 12 போலீசார் பணத்தை பறிமுதல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் தனிப்படையினர் லஞ்சம் கேட்பதாக குற்றவாளிகளின் உறவினர்கள் ராஜஸ்தானில் பொய்யாக புகார் கொடுத்துள்ளனர்.  

விசாரணைக்கு பிறகு தனிப்படையினர் திருச்சிக்கு வரவுள்ளனர் என்றும், போலீசார் மீது பொய் புகார் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் திருச்சி மாநகர காவல் துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய ப்ரியா செய்தியாளர்களை சந்தித்தபோது..... திருச்சியில் 7 இடங்களில் கடந்த (ஜுன் - நவம்பர் -2022) மாதத்தில் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நான்கு பேரை  காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் 255 சவரன் நகை கொள்ளை போய் உள்ளது. திருச்சியில் மட்டும் 170 சவரன் கொள்ளை போனது. இது தொடர்பாக நகைகளை மீட்க கன்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் ராஜஸ்தான் விரைந்தனர். தற்பொழுது 300 கிராம் மட்டுமே அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. மீதி உள்ள நகைகளை மீட்பதற்கு காவல்துறையினர் முற்பட்டபோது இவர்கள் பணம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ராஜஸ்தானில் புகார் கொடுத்து அவர்களை (திருச்சி போலீசார் 12பேரை) விசாரணை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளினர்.

அவர்களுக்கு உரிய ஆவணங்களை கொடுத்து அவர்கள் தற்பொழுது திருச்சி திரும்பி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் (ரத்தன், ராம்பிரசாத், சங்கர், ராமா(பெண்) கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் வட மாநிலத்தவர் 5000 பேர் உள்ளனர். முக்கியமாக வடமாநிலத்தவர் பணிபுரியும் இடங்களில் அவருடைய ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை முறையாக சேகரித்து வைக்க வேண்டும் என ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn