மணப்பாறை அருகே அனுமதியின்றி குவாரி மண் எடுத்ததாக முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு – 4 பேர் கைது

மணப்பாறை அருகே அனுமதியின்றி குவாரி மண் எடுத்ததாக முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு – 4 பேர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி பகுதியில் திங்கட்கிழமை அனுமதியின்றி குவாரி மண் அள்ளிய 3 லாரிகள், 2 ஜேசிபி இயந்திரங்களையும் டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி குவாரி மண் எடுத்ததாக முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள  வளநாடு போலீஸார் வாகன ஓட்டுனர்கள் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மணப்பாறை அடுத்த திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை கல்லாமேடு பகுதியில் தனிநபர் இடத்தில் குவாரியிலிருந்து மண் எடுத்து கொட்டப்பட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து டி.எஸ்.பி ஜனனிப்ரியா தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் சூர்யா உள்ளிட்ட தனிப்படையினர் திங்கட்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கல்லாமேடு பகுதியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகருக்கு சொந்தமான பெட்ரோல் நிலையம் அமைப்பதற்காக அருகே உள்ள சொரியம்பட்டி குவாரியிலிருந்து அனுமதியில்லாமல் லாரிகளில் மண் எடுத்து வரப்பட்டு, ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது தெரியவந்தது.

இதனையடுத்து காவல் ஆய்வாளர்கள் சு.கருணாகரன், ஜெய்சங்கர், முருகேசன் ஆகியோர் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்த 2 ஜேசிபி இயந்திரங்களையும், மண் எடுத்து வந்த 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வளநாடு போலீஸார் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து, வாகன ஓட்டுனர்கள் ஆறுமுகம், கண்ணன், பன்னீர்செல்வம் மற்றும் செல்வராஜ் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn