திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா - ஆயிரக்கணக்கான ஆட்டு குட்டிகள் நேர்த்திக்கடன்

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா - ஆயிரக்கணக்கான ஆட்டு குட்டிகள் நேர்த்திக்கடன்

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் குட்டிக் குடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி மாநகர காவல் தெய்வமாக விளங்கும் குழுமாயி அம்மன் கோவில் வருடாந்திர தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தத் திருவிழாவிற்காக திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள கோவிலில் இருந்து பக்தர்கள் அம்மனை தேரில் வைத்து புத்தூர் மந்தைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஓலைப்பிடாரி அலங்காரத்தில் இருந்த அம்மன் தேரை, புத்தூர் அக்ரஹாரம், வடக்கு முத்துராஜா வீதி உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வழியாக வீதி உலா வந்தது.

அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அம்மனுக்குத் தேங்காய், பழம், மாவிளக்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா கடந்த பிப்ரவரி 26ம் தேதி காப்பு கட்டுதலையடுத்து, மார்ச் 6ம் தேதி காளியாட்டத்துடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது, விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மந்தையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட ஆடுகளை கொண்டு வந்தனர். மருளாளி இன்று (10.03.2022) காலை 11:30 மணியளவில் மந்தைக்கு வந்தார். முதலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரசு கிடா வழங்கப்பட்டது. 

பின்னர் முறைப்படி நங்காவரம் பண்ணை ஆடுகள் வழங்கப்பட்டு பொதுமக்கள் ஆடுகள் நேர்த்திக்கடன் கொடுக்கப்பட்டது. மருளாளி ஆட்டின் இரத்தத்தை குடித்து அருள்வாக்கு கூறினார். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இந்த விழாவிற்க்காக ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO