திருச்சி வெக்காளியம்மன் கோயில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி வெக்காளியம்மன் கோயில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்தது திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயம். மிகவும் பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் அம்மன் மக்களின் குறைதீர்ப்பதற்காக மேற்கூரையின்றி அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை, மற்றும் புத்திர தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தனை சிறப்பு மிக்க இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பான முறையில் நடைபெறுவது வழக்கம்.

கடந்த 6ம்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இவ்விழாவில், அன்று முதல் பூத, கயிலாய, காமதேனு, சிம்ம, யானை, அன்னம், குதிரை ஆகிய வாகனங்களில் வெக்காளி அம்மன் வீதி உலா வந்தார். 9ம் நாளான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திருத்தேரோட்டத்தினைத் தொடங்கி வைத்தார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

மேலும், முக்கிய வீதிகள் வழியாக சென்ற திருத்தேர் மதியம் நிலையை வந்து அடைந்தது. முன்னதாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அழகு குத்தி வந்து அம்மனை வழிபட்டனர். 

தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை சார்பில் சிறப்பான வகையில் செய்திருந்தனர். கொரோனா பெரு தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் தேரோட்டம் நடைபெறாமல் இருந்ததால் இந்த வருட தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை தரிசனம் செய்ய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO