லண்டன் குடியுரிமை பெற்றவர் திருச்சி மதுபானக்கூடத்தில் அடித்துக் கொலை

லண்டன் குடியுரிமை பெற்றவர் திருச்சி மதுபானக்கூடத்தில் அடித்துக் கொலை

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் மதுக்கூடத்தில் நடந்த தகராறில் வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர்  அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி, சுப்பிரமணியபுரம், இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (46). லண்டனில் உள்ள பெட்ரோல் பம்பு ஒன்றில் பணியாற்றி வரும் அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இவர் அண்மையில் கிராப்பட்டி பகுதியில் புதிதாக வீடு கட்டி அதன் குடிபுகு விழாவுக்காக திருச்சி வந்திருந்தார். தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், நவம்பர் மாதம் அவர் லண்டன் திரும்ப திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று(25.10.2022) திருச்சி டிவிஎஸ் டோல்கேட் உலகநாதபுரம் பகுதியில் (முடுக்குப்பட்டி) உள்ள அரசு மதுக்கடையில் உள்ள மதுக்கூடத்துக்கு மது குடிக்க சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மது குடித்து கொண்டிருந்த முடுக்குப்பட்டியை சேர்ந்த தர்மன், உலகநாதபுரத்தை சேர்ந்த சரவணன், தீடீர் நகரைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 
அருகில் அமர்ந்து மதுக்குடித்துக் கொண்டிருந்த சின்னதுரை அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.

இதில், தர்மன், சரவணன் இருவரின் கோபமும் சின்னதுரை பக்கம் திரும்பியுள்ளது. இருவரும் சேர்ந்து சின்னதுரையை சராமாரியாக கைகளாலும், பீர் பாட்டிலாலும் தாக்கியுள்ளனர். தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த சின்னதுரையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.  இச்சம்பவம் குறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தர்மன், சரவணன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் காலை 10:30 மணிக்கு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்கு முன்பாகவும் மதுபான கூடம் செயல்பட்டு உள்ளது. மருத்துவமனையில் 11 மணியளவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO