திமுகவிற்கு சொரணை கிடையாது - மத்திய இணை அமைச்சர் திருச்சியில் பேட்டி

திமுகவிற்கு சொரணை கிடையாது - மத்திய இணை அமைச்சர் திருச்சியில் பேட்டி

மத்திய அரசின் ரோஜ்கார் மேளா திட்டத்தில், அரசு பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு, திருச்சியில், பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அரசு பணிகளில் நியமனம் பெற்றவர்களுக்கு, மத்திய இணை அமைச்சர் முருகன், பணி ஆணை வழங்கிய பின், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்.....

கடந்த ஆண்டு, ஆக.15ம் தேதி, ஒரு ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு, மத்திய அரசு பணிகளில் நியமனம் செய்யப்படுவர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கடந்த அக். மாதம் முதல், தற்போது வரை, 9 லட்சம் பேர் மத்திய அரசு பணியில் நியமனம் பெற்றுள்ளனர். விரைவில், ஒரு லட்சம் பேர் பணி நியமனம் செய்யப்படுவர். கடந்த 9 ஆண்டுகளாக ஜனநாயகத்தின் மீதும், கூட்டாட்சி தத்துவத்தின் மீதும் நம்பிக்கை வைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மேற்கு வங்கதேசத்தில், கொடூர தாக்குதல்கள், சட்டம் ஒழுங்க பிரச்னைகள் ஏற்பட்டு, அரசாங்கமே இருக்க முடியாத அளவுக்கு சூழல் உருவானது. ஜனநாயத்தின் மீதும், கூட்டாட்சி தத்துவத்தின் மீதும் நம்பிக்கை இருந்ததால், எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் தற்போது, சட்டம்– ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கவர்னருக்கே பாதுகாப்பு இல்லை. கவர்னர் மாளிகையை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதே நபர் தான் பா.ஜ., கட்சி அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடத்தினார்.

சிறையில் இருந்து வெளியே வந்த இரண்டு நாட்களில், ராஜ்பவன் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். திருவாரூர் சென்று ஆதீனத்தை சந்தித்து விட்டு வரும் வழியில், அவரது வாகனத்தின் மீதும் தாக்குதல் கவர்னருக்கே பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதால், சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. யார், இவரது பின்னணியில் உள்ளனர். தி.மு.க., ஆட்சியில் எங்கு பார்த்தாலும் வெட்டுக் குத்து சம்பவங்கள் நிகழ்கின்றன. 

இதை கட்டுப்படுத்த வேண்டிய தமிழக முதல்வர், கட்டுப்படுத்தவில்லை. கிராமப்புற பள்ளி மாணவர்களிடம் கூட கஞ்சா விற்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசியதை சாதாரண நிகழ்வாக பார்க்கக் கூடாது. அந்த நபருக்கு பின்னணியில் இருந்து இயக்கியது யார்? இந்த வழக்கை சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரித்தால் தான் முழு உண்மை வரும்.

கோயம்புத்துாரில் சிலிண்டர் வெடிப்பு என்று போலீசார் மறைத்த சம்பவத்தை என்.ஐ.ஏ., விசாரித்த பின், தீவிரவாதிகள் குண்டு தயாரிப்பதற்காக ஏற்பாடு செய்ததை கண்டுபிடிக்க முடிந்தது. நேற்று, கோயம்புத்துாரில் பாலஸ்தீன கொடியை ஏற்றி உள்ளனர். சென்னை ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போடுகின்றனர். தேசவிரோத செயல்கள், தேச விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 

இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், கவர்னர் மாளிகையில் குண்டு வீசியதை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும். குண்டு வீசிய நபரை, தி.மு.க., பொறுப்பில் உள்ள வக்கீல் தான் ஜாமீனில் எடுத்துள்ளார். ஆனால், சட்டத்துறை அமைச்சர் பொறுப்பில்லாமல், மக்களை திசை திருப்பும் விதமாக பேசியது வன்மையாக கண்டிக்கத் தக்கது. 

அரசியல் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் அரசியலாகவே பதில் சொல்கிறேன். தி.மு.க., காரனுக்கு சொரணை கிடையாது. தி.மு.க., அரசாங்கத்தை பலமுறை கலைத்தது காங்கிரஸ். அவங்களோடு தான் கூட்டணி வைத்து, கொஞ்சிக் குலாவுகின்றனர். கச்சத் தீவை தாரை வார்த்த காங்கிரஸுக்கு துணையாக இருந்தது தி.மு.க., ஒவ்வொரு நேரமும், மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு விட்டு, 2009ல் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். கொன்றது காங்கிரஸும், தி.மு.க., ஆட்சியாளர்களும் தான். தமிழர்கள் நலனுக்கு எதிராகத் தான் அவை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பா.ஜ., கட்சியினர் மீதான தாக்குதல் குறித்து, நான்கு பேர் கமிட்டி விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து, தேசிய தலைவர்களிடம் அறிக்கை கொடுப்பார்கள். அதன் மீது, அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision