உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் ஆறு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் ஆறு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

மாணவர் நலன் கருதி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் ஆறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்து ஆறாவது பட்டதாரி ஆசிரியரை உடனடியாக நியமிக்க வேண்டும் - திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் (TNGTF) திருச்சி மாவட்டப் பொதுக்குழு கூட்டம், பணி நிறைவு பாராட்டு விழா, தேர்வு நிலை சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பணி நிறைவு பெறுபவர்களுக்கு, தேர்வுநிலை, சிறப்புநிலை பெறுபவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு விரைந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அரசாணை 243 ஐ நடைமுறைப்படுத்தி விரைவில் நடத்தப்பட வேண்டும், மாணவர் நலன் கருதி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் ஆறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்து ஆறாவது பட்டதாரி ஆசிரியரை உடனடியாக நியமிக்க வேண்டும், வருமானம் ஈட்டும் தாய் அல்லது தந்தை இழந்த பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் பெற்றோரின் இறப்பின் தன்மையை கணக்கில் கொள்ளாமல் உதவித்தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் தங்கவேல், மாநில துணைத்தலைவர் உமா, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஜான்கென்னடி, மணிகண்டன், மாநில செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து வட்டார பொறுப்பாளர்களும் தேர்வு நிலை சிறப்பு நிலை பெற்ற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision