டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும், தீர்வுகளும் - திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் S.காமராஜ் விளக்கம்

டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும், தீர்வுகளும் - திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் S.காமராஜ் விளக்கம்

மழைக்கால நோய்களின் பட்டியலில் டெங்கு காய்ச்சலும் அடங்கும். டெங்கு பாதிப்பு அதிகமாக, மக்கள் மத்தியில் போதிய விழிப்புஉணர்வு இல்லாததே காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். டெங்கு காய்ச்சல் வரக் காரணம் என்ன, அது எப்படி மற்றவருக்குப் பரவுகிறது, மற்ற காய்ச்சல்களிலிருந்து எப்படி அதை வேறுபடுத்தி அறிவது, அதற்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் என்னென்ன என அனைத்துச் சந்தேகங்களுக்கும் திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் S.காமராஜ் விளக்கமளித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் என்பது என்ன? 

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என டெங்குவில் 4 வகைகள் உள்ளன.  

டெங்கு எப்படிப் பரவுகிறது? 

நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய ஏடிஸ் ஏஜிப்தி (Aedes Aegypti) என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. `ஏடிஸ்' கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளை நிறப்புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை புலிக்கொசுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஏடிஸ் ஏஜிப்தி கொசுக்கள் எப்படி நோயைப் பரப்புகின்றன? 

வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டை மாடிகளில் போட்டு வைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்' கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுகின்றன. இது டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும் போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.  

எத்தனை நாள்களில் `ஏடிஸ்' கொசு வளர்ச்சியடையும்?

ஏடிஸ் கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு கொசுப்புழு, கூட்டுப்புழு பருவம் வரை வளர 7 முதல் 10 நாள்களாகும். இந்தக் கொசுக்களின் முட்டைகள் ஓராண்டு வரையிலும் அழியாமல் இருக்கும். மழைக்காலங்களில் நல்ல நீர் தேங்கியிருக்கும் இடங்களில் இந்த முட்டைகள் உயிர்பெற்று நோயைப் பரப்பும்.

`ஏடிஸ்' கொசுவின் வளர்ச்சியை எப்படித் தடுக்கலாம்? 

கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்து கொண்டால் மட்டுமே இந்தக் கொசுக்களின் வளர்ச்சியைத் தடுக்க முடியும்.''

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?

`காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். 

காய்ச்சல் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்? 

காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரால் மட்டுமே தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து, `இது டெங்கு காய்ச்சலா' அல்லது `பிற காய்ச்சலா' என்பதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும். 

டெங்கு காய்ச்சலை கண்டறிய என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன?

ஆரம்ப அறிகுறிகள் அனைத்தும் வைரஸ் காய்ச்சல்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால் உடனே நோயை உறுதி செய்ய இயலாது. காய்ச்சல் 3 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று, என்.எஸ்.ஐ ஆண்டிஜன் (NS1 Ag), டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். 

பொதுவாக ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்து விடலாம். எனவே, ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 2 அல்லது 3 நாள்கள் தொடர்ந்து செய்து கொள்ளவேண்டும்.

வைரஸ் பாதிப்பால், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் கொண்ட ரத்தம் செலுத்தப்பட வேண்டும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுவலைப் பாதுகாப்புக்குள் வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு ஐ.ஜி.எம்., ஹெமெட்டோ கிரீட் மற்றும் தட்டணுக்கள் பரிசோதனைகளின் மூலம் டெங்கு குணமாகி விட்டதா என்று அறியலாம்.

டெங்கு காய்ச்சல் வந்து குணமாகி விட்ட ஒருவருக்கு மீண்டும் வருமா?

நிச்சயமாக வரலாம். ஆனால், ஏற்கெனவே வந்த வைரஸ் பாதிப்பு மீண்டும் வராது. டெங்குவில் டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என 4 வகை வைரஸ்கள் உள்ளன. 

மீண்டும் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் என்னென்ன?

டெங்கு காய்ச்சல் வந்து குணமாகிவிட்டவரை `ஏடிஸ்' கொசு கடித்தால் மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாவது முறை வரும் டெங்கு முன்பு வந்ததைவிடத் தீவிரமாக இருக்கும். 

நிலவேம்புக் குடிநீர் குடித்தால் டெங்கு காய்ச்சல் வராதா?

டெங்கு மட்டுமல்லாது எல்லாக் காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் குடிப்பது பலன் தரும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நிலவேம்புக் குடிநீர் அருமருந்தாகும். காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமல்லாது, அனைவருமே நிலவேம்புக் குடிநீர் குடிக்கலாம். கர்ப்பிணிகள், ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தாராளமாகக் குடிக்கலாம். நிலவேம்புக் குடிநீரை சாப்பாட்டுக்கு முன் குடிப்பது சிறந்தது.  

நிலவேம்புக் குடிநீர், யார் எவ்வளவு குடிக்க வேண்டும்?

நிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாகக் குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்து விட வேண்டும். சாதாரணமாக ஒரு நாளைக்கு 10 மி.லி முதல் 50 மி.லி வரை அருந்தலாம். குழந்தைகள் (3 - 12 வயதுக்குட்பட்டோர்) 15-30 மி.லி, பெரியவர்கள் 15-ல் இருந்து 50 மி.லி வரை அருந்தலாம். காய்ச்சல் பாதித்தவர் ஒரு நாளைக்கு 3 தடவை குடிக்கலாம். காய்ச்சல் இல்லாதவர்கள் ஒருநாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். 

டெங்கு உறுதி செய்யப்பட்டால், ஆடாதொடைச்சாறு 15 முதல் 30 மி.லி, பப்பாளி இலைச்சாறு 10 மி.லி. முதல் 30 மி.லி  குடிக்கலாம்.  ரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க இவை உதவும். இதையும் சுயமாகச் செய்யக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்றே அருந்த வேண்டும். ரத்த தட்டணுக்கள் 50 ஆயிரத்தை விடக் குறையும் போது ரத்தம் வழியாக தட்டணுக்கள் ஏற்றப்பட வேண்டியது அவசியம். ரத்தத்தில் தட்டணுக்கள் குறையும் போது பப்பாளி இலைச் சாறு எடுத்து கொள்ள வேண்டும் பப்பாளி இலைச் சாறு உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் போதிய அளவு அதிகரிக்கிறது. மேலும் டெங்குவால் பாதிக்கப்படும் கல்லீரல் பிரச்சினை நீக்கி நன்கு செயல்பட வைக்கிறது. மேலும் பப்பாளி இலையில் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் எந்த நோயும் ஏற்படாமல் தடுக்கும் .

நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக சித்த மருத்துவரை அணுகி அவர்களின் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும் சுயமருத்துவம் ஆபத்தை விளைவிக்கும் அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது பொதுமக்கள் அதனையும் பயன்படுத்தி டெங்குவில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn