என்கவுண்டர் எதிரொலி - ரவுடியின் ஆடியோவால் பரபரப்பு

என்கவுண்டர் எதிரொலி - ரவுடியின் ஆடியோவால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்த ஜெகன் (எ) கொம்பன் ஜெகன் கடந்த மாதம் திருச்சி மாவட்ட போலீசாரால் என்கவுண்டர் செய்து சுட்டுக் கொல்லப்பட்டான். இச்சம்பவத்தால் திருச்சியுள்ள ரவுடிகள் மத்தியில் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனை தொடர்ந்து திருவெறும்பூர் அருகே உள்ள கீழகணபதி நகரை சேர்ந்த பாட்டில் மணி (எ) தினேஷ் குமார் என்பவன் ரவுடி ரஜினி கொலை வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் ரஞ்சித் குமார் என்பவரை சாட்சி சொல்ல கூடாது என மிரட்டியதாக கூறி திருச்சி எஸ்பி தனிப்படை போலீசார் கைது திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

அதன் அடிப்படையில் பாட்டில் மணி மீது வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்த நிலையில், பாட்டில் மணியை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறி பாட்டில் மணி கைது செய்யப்படுவதற்கு முன் பேசி வைத்திருந்த ஆடியோவும், அவரது அக்கா பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த நந்தா (எ) நந்தகுமார் (34) என்பவனை துவாக்குடி போலீசார் கைது செய்துள்ளனர். அதன்பிறகு நந்தகுமார் பேசுவதாக கூறி ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. தன் மீது துவாக்குடி காவல் நிலையத்தில் ரவுடி வழக்கு உட்பட சில வழக்குகள் உள்ளது. அதில் சில வழக்குகளில் ஆஜராகி முடித்துள்ளதாகவும், மேலும் சில வழக்குகளில் இன்னும் ஆஜராகாமல் உள்ளதாகவும், இந்த நிலையில் தான் திருந்தி வாழ நினைப்பதாகவும, ஆனால் போலீசார் தன்னை என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்ல பார்ப்பதாகவும் கூறி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் துவாக்குடி போலீசார் புருஷோத் (36) என்பவர் துவாக்குடியில் இருந்து வாழவந்தான் கோட்டைக்கு செல்லும் சாலையில் சென்ற பொழுது நந்தாவும் அவனது நண்பர் மனோஜ் என்பவனும் கத்தியை காட்டி மிரட்டி புருசோத்திடம் ஆயிரம் ரூபாய் பணம் பறித்ததாகவும், இது சம்பந்தமாக புருஷோத் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நந்தாவையும் மனோஜையும் கைது செய்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணை செய்து இருவரையும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.