குதிரை ரேஸ் பந்தயம் - திருச்சியில் வாலிபர் கொலை

குதிரை ரேஸ் பந்தயம் - திருச்சியில் வாலிபர் கொலை

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (வயது 28) இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் சம்பாதித்து வந்தார். இவர் இன்று மதியம் உறையூர் பஞ்சவர்ண சுவாமி மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது திடீரென்று மூன்று மர்ம நபர்கள் அருகில் வந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சண்முகத்தை வெட்ட முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சண்முகம் அங்கிருந்து வேகமாக ஓடினார். அவரை இந்த மூன்று மர்ம நபர்களும் பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஏராளமானவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓடினார்கள்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு காபி கடையில் சண்முகம் நுழைந்த போது அவரை அங்கு வழி மறித்து மூன்று பேர் கொண்ட மர்மகும்பல் அரிவாளால் வெட்டினர். இந்த சம்பவத்தில் சண்முகம் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். பிறகு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து உறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் குதிரை ரேஸ் பந்தயம் தொடர்பாக இந்த கொலை நடந்து இருக்கிறது என்று தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறையூரில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn