திருச்சியை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற மாநகர காவல்துறை பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திருச்சியை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற மாநகர காவல்துறை பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு

சென்னையில் இரண்டாம் வகுப்பு மாணவன் பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு தமிழக அரசு கடுமையான கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. பள்ளி மாணவ - மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவுப்படி திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

திருச்சி பீமநகரில் உள்ள செவன்த்டே மேல்நிலைப் பள்ளியில் 9, 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை திருச்சி கண்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் பேசினார். மேலும் விபத்தில்லா மாவட்டமாக திருச்சி மாற்ற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு திருச்சி மாநகரில் போக்குவரத்து சீர் செய்யும் சேவையில் வகையில் பள்ளி மாணவ-மாணவிகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளதாக தெரிவித்தனர். இதுமட்டுமின்றி போக்குவரத்து விதிமுறைகளையும், சாலையிலுள்ள சைகைகளையும் பின்பற்றினால் சாலை விபத்துகளைத் தடுக்க முடியும். 

வாகனத்தில் அதிகம் பழுது ஏற்படாமலும், வாகனத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏதும் நேராமலும் தடுப்பதால், சாலை விபத்துகள் தவிர்க்கப்படும். வாகனம் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். வாகனங்களை அதிவேகமாக இயக்கக் கூடாது. வேகத்தடைகளை கவனித்து செல்ல வேண்டும். எதிரே வரும் மற்றவர் மீது அக்கறை கொண்டு நடக்கவேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகள் தங்களது சந்தேகங்களை காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கண்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் சேரன், அமர்வு நீதிமன்ற காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO