வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று (21.04.2023) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்... வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவை / வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள். அன்றாட தட்ப வெப்ப நிலை அறிய செய்திதாள், தொலைகாட்சி செய்தி மற்றும் வானொலி செய்திகளை தவறாமல் கேட்க வேண்டும். தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் பருகவேண்டும்.

எடை குறைவான, இறுக்கமில்லாத, கதர் ஆடைகளை அணிவது, கண்களுக்கு கூலிங்கிளாஸ் மற்றும் வெயிலில் செல்லும் போது குடை பயன்படுத்தவும் மற்றும் காலணிகளை அணிந்து செல்லவும் வேண்டும். வெளியில் பயணம் செல்லும் போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும். வெளியில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும ; ஈரத்துணியினை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பாகங்களில் அணிந்து வேலை செய்தல் வேண்டும். உப்பு கரைசல் நீர் (ORS), வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர் ஆகாரம், எலுமிச்சை ஜுஸ், லெஸி மற்றும் மோர் ஆகியவை உடம்பில் உள்ள நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதால் இதனை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

வெப்பத்தினால் ஏற்படக்கூடிய தலைவலி, வலிப்பு, அரிப்பு, பக்கவாதம், தலைசுற்றல், குமட்டல் மற்றும் அதிக வியர்வை போன்ற பாதிப்புகள் ஏற்படின் உடன் மருத்துவரை அணுகவேண்டும். மின் விசிறி மற்றும் ஈரத்துணிகளை பயன்படுத்துதல் வேண்டும் மற்றும் அடிக்கடி குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். பணிபுரியும் இடத்தின் அருகில் போதிய அளவு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தொழிலாளர்கள் நேரடி சூரிய ஒளியில் வேலைசெய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வேலை செய்யும் பொழுது, கூடுதல் ஓய்வு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். வெயில் குறைவாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகளை செய்ய திட்டமிடல் வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்ல கூடாது.

முதியவர்களுக்கான வழிமுறைகள் தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிபடுத்திக்கொள்ளவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றினால் அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கான வழிமுறைகள் கால்நடைகளுக்கு நிழல் தரும் கூரை அடியில் கட்டவும், போதிய வசதி செய்து கொடுக்கவும் வேண்டும்,

அவசியமாக போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகளை வாகனங்களில் அடைத்து வைக்க வேண்டாம். மேலும் பருவமழை மாற்றங்களினால் இந்தவருடம் கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

மேலும் மாடி வீடுகளில் மேற்கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேற்புறம் உள்ள இரும்புகள் சூடாகி மின்விசிறி, டியூப்லைட் கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன. எனவே கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை வைத்துக்கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கேஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண்ணென்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் தங்களை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.