இணையம் வழியே கல்வி பயில்பவர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

இணையம் வழியே கல்வி பயில்பவர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜோசப் கல்லூரியில் நடைபெறும் கைப்பந்து போட்டியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அக்கல்லூரியில் நடைபெற்ற ஸ்மார்ட் கல்வி குறித்த கருத்தரங்கில் ஸ்மார்ட் கல்வி குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடையே உரையாற்றினார்

ஹோமோ சேப்பியன்ஸ் அடைந்துள்ள அடுத்த பரிமாணம்தான் ஹோமோ டிஜிட்டல்ஸ் என உலக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். செயற்கை நுண்ணறிவு ((Artificial intelligence - AI), மெய்நிகர் எதார்த்தம் (Virtual Reality), மிகை மெய்மை எதார்த்தம் (Mixed reality), Big Data, Automation, Hybrid Reality இவை பயன்படாத நாடுகளும், துறைகளும் இல்லை எனலாம்.

இரும்பு யுகம், மின்சார யுகம் போன்றவைகள் மனிதனை மிக லேசாகத்தான் பாதித்ததாம். இந்த டிஜிட்டல் யுகத்தை ஒப்பிடுகையில் கடந்த யுகங்கள் எல்லாம் அவனின் வளர்ச்சியில் மிக லேசான பாதிப்புகளைத்தான் ஏற்படுத்தியதாம்! ஆனால் இன்றைய டிஜிட்டல் யுகம் புதிய வகை மனிதனையே உருவாக்கிவிட்டது என்கிறார்கள். தொழிற்புரட்சியும் கல்வியும் : ‘Every industrial revolution brings along a learning revolution’ என ஸ்பானிய கல்வியாளர் Alexander De Croo அவர்கள் சொல்லியிருக்கிறார். அதாவது ‘ஒவ்வொரு தொழிற்புரட்சியும் தன் கூடவே ஒரு கற்றல் புரட்சியையும் கொண்டதாக இருக்கின்றது’ என்கிறார். அந்த வகையில் இந்த டிஜிட்டல் புரட்சி என்பது மிகப்பெரும் கற்றல் புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றது எனலாம்.

கொரோனா : அதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் நம் கண்முன்னே நிகழ்ந்த கொரோனா கால கற்றல்கள். நவீன தொழில்நுட்பங்களையும் வழிமுறைகளையும் பயன்படுத்தி கல்வி வழங்கும் நிறுவனங்கள் ‘எட்டெக்’ (EdTech) நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த EdTech தொழில்நுட்பங்களின் வழியாகத்தான் கொரோனா காலத்தில் உலகம் முழுவதிலும் கற்றல் செயல்பாடுகள் நடைபெற்றன. அமெரிக்காவுக்குப் பிறகு, இணையம் வழியே கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கல்வி எவ்விதத்தில் பயிற்றுவிக்கப்பட்டாலும் அதை பொருளாதாரம் மற்றும் வணிக சந்தையாக பார்க்கக்கூடாது. இருப்பினும் ஒரு எடுத்துக்காட்டுக்காக சொல்கின்றேன்.

2020-ல் இத்துறையின் சந்தை வாய்ப்பு 2.8 பில்லியன் டாலராக (ரூ.22,680 கோடி) இருந்தது. 2025-ல் அது 10 பில்லியன் டாலராக (ரூ.81,000 கோடியாக) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னை பொருத்தவரை இதுபோன்ற வணிக சந்தைகளை டிஜிட்டல் தொழில்நுட்ப கல்வியின் குறையாகவே பார்க்கின்றேன். ஏனென்றால் இந்தியா போன்ற நாடுகளில் பல கிராமங்களுக்கு இன்னும் மின்சாரம் கூட செல்லவில்லை. இந்த வேளையில் இணையத்தின் வழியாக அனைத்து கிராமபுற மாணவர்களுக்கும், கடைகோடி

மாணவர்களுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் செல்லுமா என்பது சந்தேகத்திற்குரியது. இதை இந்திய ஒன்றிய அரசு சரிசெய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த ‘‘கல்வி 4.O’’ எனப்படும் புரட்சியை நம்மால் எதிர்கொள்ள முடியும். திராவிட இயக்கத்தை சேர்ந்தவன் என்கிற முறையில் இதிலும் சமத்துவம் வேண்டும் என்றே வலியுறுத்துகின்றேன்.

Smart Class : நமது தமிழ்நாடு எப்போதும் கல்வியில் மற்ற மாநிலங்களை விட ஒருபடி முன்னேறி சென்று கொண்டேதான் இருப்போம். அந்த வகையில் இந்த யுகத்திற்கு ஏற்றார் போல பள்ளிகளில் அதிகபடியான Smart class வகுப்பறைகளை ஏற்படுத்தி வருகின்றோம். இது வருங்கால மாணவர்கள் தொழில்நுட்பம் சார்ந்து கற்பதற்கான உதவியாக இருக்கும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்... கிராமப்புற அளவில் டிஜிட்டல் சார்ந்த தொழில்நுட்பங்களை கொண்டு செல்ல கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கல்விப் புரட்சி 4.0 செயல்படுத்த ,அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கரும்பலகையை வைத்து பாடம் நடத்திய காலம் போய், ஸ்மார்ட் வகுப்பறைகள் தற்போது கொண்டு வரப்படுகிறது.

இந்த மாதிரி வரும் பொழுது தேவையான இணையதள வசதியை ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தை பொறுத்த வரை ஜனவரி மாதம் தொடங்கி தமிழக முழுவதிலும் உள்ள 500 நூலகங்களில் wifi வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாதிரியான விஷயங்களில் மத்திய அரசு அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையே இருக்கும்.சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதில் அதிகப்படியான நாட்டம் செலுத்த வேண்டும். அதில் தொடர்புடைய, அரசு பள்ளிகளை சார்ந்து பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் கொண்டு வருகிறார். அரசு பள்ளியை நோக்கி அதிக அளவில் மாணவர்கள் வரும் நிலையில், அதை மேம்படுத்த வேண்டும் என்கிற வகையில்தான் தமிழக கல்விக் கொள்கை இருக்கும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn