ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முற்றிலும் வெறுப்பு மனப்பான்மையுடன் அளிக்கப்பட்ட தீர்ப்பு - ஜவாஹிருல்லா பேட்டி

ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முற்றிலும் வெறுப்பு மனப்பான்மையுடன் அளிக்கப்பட்ட தீர்ப்பு - ஜவாஹிருல்லா பேட்டி

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு அக்கட்சி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் திருச்சியில் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா,

கிராம சபை போல் நகர்புறங்களில் மக்கள் குறைகளை கேட்க மக்கள் சபை நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பை வரவேற்கிறோம். அதே மத மோதல்களை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு காவல் பிரிவு ஏற்படுத்தப்படும் என்கிற அறிவிப்பையும் வரவேற்கிறோம்.

ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு முரணானது. முற்றிலும் வெறுப்பு மனப்பான்மையுடன் அளிக்கப்பட்ட தீர்ப்பு. 

ஹிஜாப் அணிவது இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமை.அதை அரசியலமைப்பு சட்டமும் உறுதி செய்கிறது. அதை குறித்தெல்லாம் பேசாமல் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுய விளக்கதை அளித்துள்ளார்கள். அவர்கள் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம். ஹிஜாப் அணிவது பிற மக்களுக்கு தீங்கு விளைவிப்பது அல்ல, இஸ்லாமிய பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தான்.

பா.ஜ.க மக்களிடம் வேறுபாட்டையும் வெறுப்பையும் உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். கர்நாடகாவில் பா.ஜ.க விற்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. 

அடுத்த ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் வர இருப்பதால் மக்களை திசை திருப்பவே பா.ஜ.க இதுபோன்ற செயல்பாடுகளில் இறங்கி உள்ளது.

விகிதாச்சார அடிப்படையில் 5 மாநில தேர்தல்களிலும் பா.ஜ.க விற்கு எதிரான வாக்குகளே அதிகம் விழுந்துள்ளன. பா.ஜ.க விற்கு எதிராக இருந்தவர்கள் ஒன்றிணையாமல் இருந்ததால் தான் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 

பா.ஜ.க வை வீழ்த்த தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டின் கூட்டணி மாடலை இந்திய அளவில் பின்பற்ற வேண்டும். மு.க.ஸ்டாலின் அதற்கான முன்னெடுப்பை எடுக்க வேண்டும். 

விகிதாச்சார தேர்தல் முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO