திருச்சி அருகே ஸ்வீட் கடையில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்பு இனிப்புகள் நாசம்.

திருச்சி அருகே ஸ்வீட் கடையில்  பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்பு இனிப்புகள் நாசம்.

திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் இவர் திருவெறும்பூர் பகுதியில் பல இடங்களில் ஸ்வீட் கடைகளை நடத்திவருகிறார். பிரபல இனிப்பு விற்பனை கடையின் கிளை கடையான திருவெறும்பூர் ஜெய்நகர் பகுதியில் உள்ள பேக்கரியுடன் இணைந்த ஸ்வீட் கடையில் இருந்த ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.

இதனால் கடையில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். எண்ணெய் பலகாரங்கள் மற்றும் பேக்கரி பொருட்கள் இருந்ததால் கடையில் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. தீவிபத்து குறித்து உடனடியாக நவல்பட்டு, பெல் மற்றும் திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர்  45 நிமிடங்களுக்கு மேலாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.   தீ அருகில் உள்ள மற்ற கடைகள் மற்றும் வீடுகளுக்கு பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பல லட்சம் மதிப்பிலான உபகரணங்கள், பொருட்கள் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இனிப்புகள் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது.

இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் பார்வையிட்டு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீவிபத்து காரணமாக அப்பகுதியே புகைமூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த  அவதிக்குள்ளானார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn