எரியும் நெருப்பை எடப்பாடி பழனிச்சாமி முதலில் அணைக்கட்டும் - திருச்சியில் முத்தரசன் பேட்டி

எரியும் நெருப்பை எடப்பாடி பழனிச்சாமி முதலில் அணைக்கட்டும் - திருச்சியில் முத்தரசன் பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா ஆசிரியர் பயிலரங்க கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய முத்தரசன்..... 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டு நூறாண்டுகள் ஆன நிலையில் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் பயிலரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு குறித்து புத்தகம் வெளியிடப்படுகிறது. கட்சியின் வரலாறு குறித்து மூத்த தலைவர்கள் எடுத்துரைப்பார்கள். நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஆண்டு முழுவதும் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், கலை நிகழ்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற இருக்கிறது.

கட்சியின் வரலாறுகள் முழுவதும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட உள்ளன. திமுக கூட்டணியிலிருந்து கூட்டணி கட்சிகள் வெளியேற வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் ஆசை. முதலில் அதிமுக எரிந்து கொண்டு இருக்கிறது, அதை அணைக்க எடப்பாடி பழனிச்சாமி ஏற்பாடு செய்யட்டும். தி.மு.க கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது என கூறுபவர்கள் யார்? எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, நாங்கள் தெளிவாக இருக்கிறோம், ஒற்றுமையோடு இருக்கிறோம். இந்த அணி தொடரும், மேலும் பலப்படும். ஒட்டுமொத்தமாக காவலர்களை அநாகரிகமாக பேசுவது நாகரிகமல்ல.

ஒரு விவகாரத்தில் காவல் துறை நடவடிக்கை எடுத்தால் அராஜகம் செய்கிறார்கள் என சிலர் கூறுவார்கள். அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து கொண்டு தான் இருக்கிறது. தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரமாக்க வேண்டும். மற்றவர்களுக்கு வழங்குவது போல் தீபாவளி ஊக்கத்தொகை அனைவருக்கும் வழங்க வேண்டும்.

ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்தை மாற்றுவேன் என சீமான் கூறுகிறார். அதை அவர் ஆட்சிக்கு வந்த பின் பார்த்து கொள்ளலாம். தற்போது தமிழ் தாயை மதிக்க வேண்டுமா ? வேண்டாமா ? தமிழ் தாய் வாழ்த்தை அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா ? வேண்டாமா ? இது தான் தற்போதைய பிரச்சனை, இதற்கு தான் சீமான் பதில் கூற வேண்டும் என்றார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision