வயதான முதியவருக்கு ரயிலில் பயணிக்க உதவி செய்த எம்பி

வயதான முதியவருக்கு ரயிலில் பயணிக்க உதவி செய்த எம்பி

எனது திருச்சி தொகுதியின் பிரதான முகங்களில் ஒன்றாக திகழும் திருச்சிராப்பள்ளி இரயில் நிலையத்தின் அனைத்து பகுதிகளையும் சுமார் 4 மணி நேரமாக ஆய்வு செய்து, இரயில்வே துறையின் முதன்மை அதிகாரிகளிடம் ஆலோசனைகள் வழங்கி கலந்துரையாடினேன்.

அதன் விவரம் வருமாறு:திருச்சி இரயில் நிலையத்தினுள் நுழைந்த உடன் முதலில் உள்ள பயணச்சீட்டு வழங்குமிடத்தில் உள்ள பொது மக்களிடம், இந்த இரயில் நிலையத்தில் வழங்கும் சேவைகள் குறித்து கேட்டறிந்தேன். அதில் ஒரு பெரியவரிடம் கேட்டபோது, அவர் சேலம் செல்வதற்காக வந்தேன், உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு (confirm ticket) கிடைக்காததால் unreserved compartment ல் தங்களால் பயணிக்க இயலாது எனவே பேருந்தில் செல்லுமாறு அவரை இரயில்வே ஊழியர்கள் கேட்டுக்கொண்டதாகவும், வயோதிகத்தின் காரணமாக பேருந்துக்கு போக முடியாமலும் அமர்ந்திருக்கிறேன் என்றார். உடனே இரயில்வே அதிகாரிகளிடம் கேட்டு, ஒரு பொறுப்பாளரை அனுப்பி அவரை இரயில் உரிய இடமளித்து ஏற்றி விட கேட்டுக் கொண்டேன். 

அப்போது அவர் அருகில் இருந்த இன்னொரு பெரியவர் ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கு இரயில் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டதை எடுத்துக் கூறி இப்போது அது இல்லாமல் எங்களைப் போன்றோர் சிரமப்படுகிறோம், அதற்கு ஏற்பாடு செய்தால் புண்ணியமாக போகும் என்றார். “ஐயா இது குறித்து நாடாளுமன்றத்தில் நான் எடுத்துரைத்தேன். அப்போது மறுத்தார்கள். ஆனாலும் நான் மூத்த குடிமக்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் அரசு அவசியம் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், அதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினேன். எனது கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு பரிசீலிப்பதாக ஒன்றிய இரயில்வே அமைச்சர் உறுதி கொடுத்தார். எனவே விரைவில் பழையபடி கட்டண சலுகை வரும் என்று நம்புவோம்” என்று கூறினேன்.

அப்படியே வெளியில் நின்று கொண்டிருந்த பயணிகளுக்கான கட்டண மின்வாகனம் நல்ல முறையில் இயக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொண்டு, இப்படி ஒரு சேவை உள்ளதாக குறிப்பிட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் இரயில் நிலைய நுழைவாயில்களிலும் அதேபோல் நடைமேடைகளிலும் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். பிறகு நுழைவாயிலின் அருகே உள்ள காவேரி மருத்துவ அறைக்கு சென்று பார்வையிட்டேன். பணியில் உள்ள மருத்துவர் மற்றும் செவிலியரிடம் கருத்து கேட்டறிந்தேன். தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளனவா என்றும் பார்வையிட்டேன். பணியில் உள்ள மருத்துவரின் பார்க்கிங் தேவைகள் குறித்து இரயில்வே அதிகாரிகளிடம் எடுத்துரைத்து செய்து கொடுக்கச் சொன்னேன். 

பயணியர் தங்குமிடத்தை பார்வையிட்டேன். அங்கு பணியில் இருந்த தூய்மை பணியாளரிடம், அவர்களின் சம்பள உயர்வு மற்றும் பிஎஃப் இஎஸ்ஐ பிடித்தம் செய்யதல் ஆகிய கோரிக்கையை கேட்டுக் கொண்டதுடன், மேல் அதிகாரியிடம் இதுகுறித்து ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். நடைமேடை அருகில் அமைக்கப்பட்டுள்ள உடமை காப்பகம் (luggage locker) செயல்படும் முறையை கேட்டு அறிந்தவுடன், அதனை திறந்து காண்பிக்குமாறு கேட்டேன். குடிதண்ணீர் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்தேன். 

கழிவறை பகுதிக்குள் சென்று ஆய்வு செய்ததுடன், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.கேண்டீன் பகுதியை பார்வையிட்டேன். அங்கு வைக்கப்படாத புகார் புத்தகம் குறித்து கேட்டதுடன், உடனடியாக புகார் புத்தகத்தை வைக்கவும், இங்கு புகார் புத்தகம் உள்ளது என்று ஒரு பலகை எழுதி வைக்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டேன். புகார் புத்தகம் உடனே ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அது குறித்த அறிவிப்பு பலகையும் விரைவில் அமைப்பதாக உறுதி தந்தனர். Lift மற்றும் escalater-ன் பயன்பாடுகளை நேரடியாக கண்டறிந்தேன். 

பின்புற வாகன நிறுத்துமிடம் பகுதிக்கு சென்று அங்கு அமைக்கப்படவுள்ள மூடிய வாகன நிறுத்தத்தை பற்றி கேட்டறிந்தேன். அந்தப் பகுதியில் நாட்டு மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். வெளியேறும் பகுதியில் உள்ள சறுக்குப் பாதையில் கூடுதல் வழுவழுப்பு உள்ளதால் பலர் விழக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என்று விளக்கிக் கூறி அதையும் சரி செய்ய சொன்னேன்.இரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே வந்த பின் அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களை சந்தித்து கலந்துரையாடி, அவர்களுக்கும் பயணிகளுக்கும் ஏதேனும் கோரிக்கை உள்ளனவா என்று கேட்டேன். 

அப்போது வெளியில் இருக்கும் கட்டண கழிவறையை அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் உபயோகிப்பதற்கும் கட்டணம் பெறப்படுவதுடன், இரண்டே இரண்டு கழிவறைகள் பயணிகளுக்கே போதாத போது நாங்கள் எப்படி பயன்படுத்த முடியும் என்றும் கேட்டனர். அதேபோல் குடிதண்ணீரையும் ஏற்பாடு செய்து தரக் கோரினர். புதிய கழிவறைகள் கட்டித் தர ஏற்பாடு செய்கிறேன் என்று ஒப்புதல் வழங்கியதுடன், சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கிட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தேன்.

இறுதியில் அனைத்து இரயில்வே துறை அதிகாரிகளுடன் இரயில்வே அலுவல் அறையில் அமர்ந்து எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடினேன். 

அப்போது அவர்களிடம், நமது இரயில் நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருக்கும் என்று நினைத்திருந்தேன், ஆனால் நான் எதிர்ப்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததை குறிப்பிட்டு, You have exceeded my expectations! என்று அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததுடன், இன்னும் உள்ள சிறு சிறு குறைப்பாடுகளையும் நிவர்த்தி செய்து சிறப்பாக செயல்படுவோம் என்று கூறிவிட்டு, மகிழ்வோடு புறப்பட்டு வீடு வந்தேன். மன நிறைவான நாளாக அமைந்த்தது. 

உடன், Senior Divisional Commercial Manager Tmt. Jayanthi, Division Commercial Manager Mohanappriya, Assistant Division Engineer Manickavasagam, Assistant Commercial Manager Niraimathi Pillaikhani, Deputy Station Manager Ranganathan, மற்றும் மறுமலர்ச்சி திமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி புறநகர் வடக்கு டி டி சி சேரன், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பாலுச்சாமி, தலைவர் வைகோ அவர்களின் உதவியாளர் வெ.அடைக்கலம், பகுதி செயலாளர்கள் ஜங்ஷன் எஸ். பி. செல்லத்துரை, பொன்மலை எப்.எஸ்.ஜெயசீலன், உறையூர் ஆசிரியர் முருகன், தெற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டம் தெற்கு ஆரோக்கிய ரெக்ஸ், மணப்பாறை வடக்கு சுப்பிரமணியம், ரயில்வே செழியன், தொண்டர் அணி அமைப்பாளர் ராமன், பொன்மலை பட்டி கணேசன், உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision