முக்கொம்பு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணி

முக்கொம்பு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணி

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து வருடந்தோறும் ஜீன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் கரூர் மாவட்டத்தில், மாயனூர் கதவணை, திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு தடுப்பணை ஆகியவற்றின் வழியாக, கல்லணைக்கு அனுப்பப்படும். அங்கிருந்து டெல்டா பாசனத்துக்கு, கல்லணை கால்வாய், வெண்ணாறு, கொள்ளிடம் ஆறு போன்றவற்றில் தண்ணீர் திறக்கப்படும்.

இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக நாளை மறுநாள் ஜூன் 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அணையில் திறக்கப்படும் தண்ணீர், மாயனுர், முக்கொம்பு அணைகள் வழியாக, 16ம் தேதி, கல்லணையை சென்றடையும். டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் கல்லணையில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வண்ணம் பூசும் பணிகள் முடிந்துள்ளது.

ஆனால், காவிரி ஆற்றில் வரும் 25 ஆயிரம் கனஅடி தண்ணீரை கல்லணைக்கு பிரித்துக் கொடுக்கும் முக்கொம்பு அணையில், ஷட்டர்கள் பராமரிப்பு பணி மேற்பட்ட நிலையில் வண்ணம் பூசும் பணி, இப்போது தான், துவங்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பை பொருத்தவரை, கல்லணை தான் பிரதானமாக கருதப்படுகிறது. அங்கு தான், அமைச்சர்கள் பங்கேற்கும் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அதனால், முதல் கட்டமாக அந்த அணையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

காவிரி வழித்தடத்தில் உள்ள மற்ற அணைகளில் பராமரிப்பு பணி முடிந்து, வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கதவணைகள் அருகிலுள்ள கரையோரங்களில் வளர்த்திருக்கும் புல், குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியும் காலதாமதமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve